BIG STORIES
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்.. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.. மேற்பார்வை குழு அமைத்தும் நீதிபதிகள் ஆணை
Oct 14, 2025 01:26 AM
188
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்.. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்..
கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்தும், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத த.வெ.க. தலைவர் விஜய் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளை நீக்கக் கோரியும் த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு, மதுரை அமர்விற்குள் வரும் கரூர் நெரிசல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரித்துள்ளது முறையான நடவடிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரச்சாரத்திற்கு வழிகாட்டுதல் நெறிமுறை வகுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கிரிமினல் ரிட் மனுவாக பதிவு செய்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் வழக்கின் விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எவ்வித கோரிக்கையும் எழாமலும், எவ்வித முகாந்திரமும் இல்லாமலும் தனி நீதிபதி சிறப்பு புலானாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டதற்கான காரணத்தை நீதிபதி தனது தீர்ப்பில் எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த காரணத்திற்காக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சி.பி.ஐ.யின் விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருக்காத ஆனால் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். மேலும் கரூர் நெரிசல் வழக்கு விசாரணை தொடர்பாக மாதம் தோறும் நீதிபதி ரஸ்தோகி குழுவிடம் சி.பி.ஐ. அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற ஆணையிட்டுள்ளது.
மேலும் மதுரை அமர்வில் டிவிசன் பெஞ்ச் விசாரித்த ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தது எப்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதியுடன் தான் தனி நீதிபதி வழக்கை விசாரித்தாரா? வழிகாட்டுதல் நெறிமுறை கோரிய வழக்கை கிரிமினல் ரிட் வழக்காக பதிவு செய்தது எப்படி என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இதனிடையே, மனுதாரர்களுக்கே தெரியாமல் அவர்களது பெயரில் சி.பி.ஐ. விசாரணை கோரி மோசடியாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதத்தை முன்வைத்தது. இதனை கேட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் மோசடி மனு தாக்கல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும் என குறிப்பிட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu