BIG STORIES
தடுப்பு ஊசி - குழந்தை பலி.. செவிலியரை விரட்டி தாக்குதல்.. கத்தியால் கிழித்த கொடுமை..! பாதுகாப்பு கேட்டு சாலை மறியல்
Oct 09, 2025 01:23 AM
431
தடுப்பு ஊசி - குழந்தை பலி.. செவிலியரை விரட்டி தாக்குதல்.. கத்தியால் கிழித்த கொடுமை..!
ஒட்டன் சத்திரம் அருகே தடுப்பூசி போடப்பட்ட பச்சிளம் குழந்தை காய்ச்சல் வந்து உயிரிழந்த நிலையில், தடுப்பூசி போட்ட இரு செவிலியர்களை குழந்தையின் தாத்தாவும், தந்தையும் சேர்ந்து கத்தியால் கிழித்து விரட்டி விரட்டி தாக்கியதாக குற்றஞ்சாட்டி செவிலியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த வாகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியர்களாக பணியாற்றி வருபவர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் ஹேமலதா. இவர்கள் இருவரும் புதன்கிழமை தடுப்பூசி போடும் பணிக்காக ஒட்டன்சத்திரம் பொருளூர் சர்ச் காலணிக்கு களப்பணிக்காக சென்றுள்ளனர்,
அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் மனைவி கார்த்திகாவிற்கு கடந்த ஜூலை மாதம் 27ந்தேதி ஆண் குழந்தை பிறந்ததை அறிந்து அந்த குழந்தைக்கு கடந்த 17ந்தேதி செவிலியர் வைஜெயந்தி மாலா , பென்ட்டா வேலண்ட்(( Pentavalent )) எனும் முதல் தடுப்பூசியை செலுத்தி சென்றுள்ளார்.
இதன் பின்னால் அந்த பச்சிளம் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பழனி அரசு தலைமை மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அன்று மாலையே மாற்றி உள்ளனர் . இந்த நிலையில் 25ந்தேதி அன்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனால் தடுபூசி போட்ட செவிலியர் மீது மதன் குமார் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனை அறியாமல் செவிலியர் ஹேமலதா மீண்டும் அதே பகுதியில் வழக்கம் போல தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மதன் குமார், “ என் குழந்தையின் உயிரை பறித்தது நீதான்” எனக் கூறி ஆத்திரமடைந்து தந்தை நல்லமுத்துவுடன் சேர்ந்து இரண்டு செவிலியர்களையும் கற்கள் மற்றும் கத்திகளால் பலமாக தாக்கி ஓட விட்டதாக கூறப்படுகின்றது.
மதன்குமாரின் தந்தை நல்லமுத்து கத்தியை செவிலியரின் காதை கிழித்து விரட்டியதாகவும் , செவிலியர்கள் உடனடியாக அலறி அடித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். தொலைபேசி மூலம் வாகரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கவிச்சக்கரவர்த்தி என்பவரை உதவிக்கு அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவரையும் மதன்குமார் நல்லமுத்து சேர்ந்து பலமாக தாக்கி ஆபாசமாக பேசியதாக தாக்கப்பட்ட செவிலியர் கண்ணீர் மல்க தெரிவித்தார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான காவல்துறையினர் மதன்குமார் மற்றும் நல்லமுத்து ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்,
இந்நிலையில் படுகாயம் அடைந்த வைஜெயந்திமாலா மற்றும் ஹேமலதா ஆகிய இரண்டு செவிலியர்களும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,
பணியின்போது செவிலியர்களை தாக்கிய தந்தை மகன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க கோரி ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் செல்லும் பிரதான சாலையில் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையிலும் மேற்படி செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் பணியின்போது இருந்த செவிலியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, கொலை செய்ய பார்த்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu