இந்தியா
ரசிகர்களுக்கு அடுத்த 'ஷாக்'..! ரோஹித் - அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது? முன்னாள் வீரர்கள் சொல்வது என்ன?
Oct 06, 2025 04:42 PM
202
ரசிகர்களுக்கு அடுத்த 'ஷாக்'..! ரோஹித் - அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
அதில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவும், விராட் கோலியும், ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் விளையாட இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதே நேரத்தில் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ ட்விஸ்ட் கொடுத்தது.
இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்து ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி நீக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அகர்கர், "2027 உலகக்கோப்பையில் விளையாட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இன்னும் உறுதியளிக்கவில்லை. 3 வடிவங்களுக்கும் வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை குறைவாகவே விளையாடுவதால், இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால் தான் 2027 உலகக்கோப்பைக்கு தயாராக முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் 2027 உலகக்கோப்பையில் விளையாடுவார்கள் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அஜித் அகர்கரின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி நீக்கம், இந்திய அணியின் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பே ரோஹித் சர்மாவிற்கு தெரியுமா? என்ற கேள்விக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பாகவே இதை அவரிடம் தெரிவித்தோம் எனவும் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
கேப்டன்சி நீக்கப்பட்டது குறித்து ரோஹித் சர்மா என்ன சொன்னார் என அஜித் அகர்கரிடம் கேட்டதற்கு, "அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உரையாடல். அதனைப் பொதுவெளியில் தெரிவிக்க விருப்பமில்லை." எனத் தெரிவித்தார்.
ரோஹித் சர்மா 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் வென்று கொடுத்தார்.
அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பதையும் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். தற்போது மேலும் ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரோஹித்தை கேட்பனாக பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ரோஹித்தை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவரை கேப்டன் ஆக்குங்கள், ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார்.
இந்தத் தொடரில் அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். 2027 ஒருநாள் உலக கோப்பையைப் பற்றி அணி தேர்வாளர்கள் யோசிக்கிறார்கள் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா அணி தேர்வாளர்கள் செய்தது சரிதான் என தெரிவித்துள்ளார்.
பெரிய தொடர்களுக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கப்பட்டதைப் போல, சுப்மன் கில்லுக்கும் போதிய நேரம் வழங்கப்படுவது சரி தான் என்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சடகோபன் ரமேஷ் இது குறித்து பேசியபோது, பிசிசியின் இது மாதிரியான முடிவு, ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெறத் தள்ளப்படுவதற்கான சூழலை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர், தொலைக்காட்சியில் பேசுகையில், "என்னைப் பொருத்தவரை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பேசினார்களா என்பது மட்டுமே முக்கியமானது.
ரோஹித் சர்மாவும் தேர்வாளர்களும் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என ஒப்புக்கொண்டால், இது சரியே என அவர் தெரிவித்துள்ளார்.
தனது கேப்டன்சி மூலம் இந்திய அணிக்காக 2 தொடர் ஐசிசி கோப்பைகள், ஏராளமான வெற்றிகளை வாங்கிக் கொடுத்த ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ கொடுத்தது அவமரியாதையும் துரோகமும் தான் என ரோஹித் சர்மாவின் ஆதரவாளர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu