BIG STORIES
பார்ச்சூனர் கார்களை குறி வைத்து திருடிய டெக்னிக்கல் களவாணி..! போலீசில் சிக்கியது எப்படி?
Jul 21, 2025 01:28 AM
157
சினிமா பாணியில் கார்களை திருடி பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்நோய் கும்பலுக்கு விற்ற மெகா திருடனை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் 16வது பிரதான சாலையில் வசித்து வருபவர் எத்திராஜ் ரத்னம். பத்திரிகை நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி தன் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த ஃபார்ச்சூனர் கார் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்ததில் சென்னையில் மட்டுமல்லாது புறநகர் பகுதியான மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் நான்கு கார்கள் திருடு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சர்வ சாதாரணமாக வண்டி உரிமையாளரை போல் சாவியை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்றதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி வாகனத்தை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சேலம், கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு சென்று புதுச்சேரி சென்றதும் தெரிய வந்தது.
சிசிடிவியில் உள்ள திருடனின் புகைப்படங்களை ஆய்வு செய்த போது இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான சத்யேந்திர சிங் சகாவத் என்பதை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து கார் திருடன் செல்லும் இடங்களை எல்லாம் ஆய்வு செய்த போது, புதுச்சேரியில் இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் கால் டேட்டா ரெக்கார்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் கிரைம் போலிசார் உதவியுடன் சத்யேந்தர் சிங் சகாவத்தை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட சத்தியேந்தர் சிங் சகாவத்தை விசாரணை செய்வதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விமானம் மூலம் சென்னை வந்த சத்தியேந்திர சிங், இரு சக்கரவாகனம் ஒன்றை திருடி லான்சன் டொயோட்டோ உள்ளிட்ட சொகுசு கார் சர்வீஸ் சென்டர்களை தேடிச் சென்றது தெரியவந்துள்ளது
குறிப்பாக கோயம்பேடு லேன்சன் டொயோட்டோ சர்வீஸ் சென்டரில், சத்யேந்திர சிங் சஹாவத் நோட்டமிட்டு உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.
அந்த சர்வீஸ் சென்டரில் ஃபார்ச்சூனர் கார் வைத்திருக்கும் உரிமையாளர்களின் பட்டியல்களை திருடி சர்வீஸ் மற்றும் ரிப்பேர் விட வரும் நபர்களின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டு காரை திருடியதாக கூறப்படுகிறது.
சத்தியேந்திர சிங் சகாவத் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சொகுசு கார்களை மட்டுமே நாடு முழுவதும் திருடியது தெரியவந்தது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஹரியானா ,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு காரர்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
பல மாநில போலீசாரிடம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் திருடிய பணத்தில் வழக்கறிஞர் மூலமாக ஜாமினில் வெளிவந்து மீண்டும் கைவரிசை காட்டுவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயற்சி செய்த மிகப்பெரிய ரவுடி கும்பலான லாரன்ஸ் பிஷ் நோய் கேங்கிற்கு கார்களை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
சத்யேந்திர சிங் சகாவத் பி டெக் மற்றும் எம்பிஏ பட்டதாரி ஆவார். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலியாக சொகுசு கார்களின் சாவியை தயாரித்து உரிமையாளர்கள் அசந்த நேரத்தில் காரை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் திருடும்போது வண்டி உரிமையாளர் போல் டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு சாவியை வைத்து சொகுசு காரை ஓப்பன் செய்து சர்வ சாதாரணமாக திருடிச் செல்வது தெரியவந்துள்ளது.
திருடிய பின் காரின் நம்பர் பிளேட்டை மாற்றி சாலை மார்க்கமாகவே அருகில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விட்டு ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது
தெலுங்கானா மாநிலத்தில் பிரபல கன்னட தயாரிப்பாளர் மஞ்சுநாத் ஃபார்ச்சூனர் காரை திருடிய போது கைது செய்யப்பட்ட சத்தியந்திரசிங் சகாபத் ஜாமினில் வெளிவந்து மீண்டும் தமிழகத்தில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தன்னை பிடிக்க முடியாத போலீசார் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருக்கும் சத்தியேந்தர் சிங் தந்தை மற்றும் மனைவியிடம் விசாரிக்க சென்றால், catch me if u can என போலீசாரிடம் முடிந்தால் என்னை புடியுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பி கார்திருடன் சவால் விட்டுள்ளான்.
குறிப்பாக காரை திருடிய உடன் ஊரில் இருந்து எடுத்து வந்த நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அதிவேகமாக போக்குவரத்து விதிமீறல்களை செய்து கொண்டு இராஜஸ்தான் மாநிலத்துக்கு எடுத்துச் சென்றதால், நடுவில் போக்குவரத்து போலீசாரிடமும் சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் போக்குவரத்து அபராதங்கள் போடப்பட்டு அந்த நம்பர் பிளேட்டுக்கு சொந்தமான வாகன உரிமையாளர்கள் சிக்கித் தவித்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கார் திருடனிடமிருந்து போலி சாவிகள் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப உபகரணங்கள் மற்றும் பல்வேறு போலி தொகுப்பு சாவிகள் ஆவணங்கள் நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்னும் எத்தனை இடங்களில் இது போன்று கார்களை திருடி இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu