RECENT NEWS

இந்திய ராணுவ வலிமையை மேலும் பலத்தப்படுத்த நடவடிக்கை.. ரூ. 67000 கோடியில் அதிநவீன உபகரணங்களை வாங்க ஒப்புதல்

BIG STORIES

நிலச்சரிவு அபாயம்...பாம்புகள், விலங்குகள்...ஆபத்தான குகையில் 2 மகள்களுடன் வாழ்ந்த வெளிநாட்டு பெண்!

Jul 13, 2025 03:11 PM

206

நிலச்சரிவு அபாயம்...பாம்புகள், விலங்குகள்...ஆபத்தான குகையில் 2 மகள்களுடன் வாழ்ந்த வெளிநாட்டு பெண்!

விஷப்பாம்புகள், கொடிய விலங்குகள் உலாவும் அடர்ந்த காட்டுப்பகுதி... நிலச்சரிவு ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் மண்ணுக்குள் புதைந்துவிடும் அபாயம்... ஆபத்துகள் நிறைந்த அந்த குகைக்குள் 2 மகள்களுடன் வினோதமாக வாழ்ந்து வந்த வெளிநாட்டு பெண்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள ராமதீர்த்தா மலை அமைந்துள்ளது. இந்த மலை கொடிய விலங்குகள், விஷப் பாம்புகள் கொண்ட அடர் வனப்பகுதி என கூறப்படுகிறது. இங்கு, கடந்த 9 ஆம் தேதி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான கோகர்ணா போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியில், ஆபத்தான குகைக்கு அருகே பெண்ணின் துணிகள் காய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்.

அதிர்ச்சிக்குள்ளான போலீஸார், “உள்ளூர் மக்களே வருவதற்கு அச்சப்படும் பகுதியில் இவ்வளவு மார்டன் உடைகளை காயவைத்திருப்பது யார்?” என்று விசாரித்தபோதுதான், 40 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பெண் ஒருவர், தனது 6 வயது மற்றும் 4 வயது என இரண்டு மகள்களுடன், அந்த குகைக்குள் இருந்தது தெரியவந்தது.

அவர்களை மீட்டு விசாரணையில் ஈடுபட்டபோதுதான், அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளிவர ஆரம்பித்தது. மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் குதினா. ரஷ்யாவைச் சேர்ந்த இவரது மூத்த மகள் 6 வயது பிரேமா, இரண்டாவது 4 வயது அமா என்பதும் தெரியவந்தது. உள்ளே, அந்தப் பெண் ஒரு ருத்ரா சிலையை நிறுவி, வழிபாடு மற்றும் தியானத்தில் தனது நாட்களைக் கழித்ததும் தெரியவந்தது.

ரஷ்யாவிலிருந்து கோவா சுற்றுலாவிற்கு வந்த இவர் பிறகு கர்நாடகா கோகர்ணாவுக்கு சுற்றுலாவுக்குள் வந்துள்ளார். குதினாவுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாக இருந்ததால் அவர் வனப்பகுதியில் தங்கி தியானம் மற்றும் பிரார்த்தனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலா தலம் உள்பட பிற நகரங்களில் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால், அவர் அமைதியான முறையில் வனப்பகுதியில் தியானம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், அவர் தனது இரண்டு மகள்களுடன் அடர் வனத்தின் குகைக்குள் தங்கி இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அதேநேரம், 40 வயது வெளிநாட்டு பெண்ணான குதினா அதுவும் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தங்கியிருந்த குகையானது, மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

அதாவது, குதினா தங்கியிருந்த குகை பகுதியில்தான் கடந்த 2024 ஜூலை மாதம் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல், ஆபத்து நிறைந்த வனவிலங்குகள் இந்த இடத்தில் அதிகமாக நடமாடுகின்றன. விஷப்பாம்புகள் உலாவிக்கொண்டிருக்கும். ஆனால், இந்த ஆபத்துகளை எல்லாம் உணராமல் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, உத்தர கன்னட காவல்துறை கண்காணிப்பாளர் எம். நாராயணா கூறும்போது, "எங்கள் ரோந்துக் குழு ராமதீர்த்த மலைகளில் உள்ள ஒரு குகைக்கு வெளியே ஆடைகள் மற்றும் பிற துணிகள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது, குதினாவும் அவரது இரண்டு மகள்களும் அங்கு வசிப்பதைக் கண்டனர்.

இப்படிப்பட்ட, காட்டுப் பகுதியில் அந்தக் குடும்பம் எப்படி உயிர் பிழைத்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் தங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குதினாவுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு, கும்டா வட்ட பன்கிகொட்லா கிராமத்தில் உள்ள 80 வயது பெண் துறவியான சுவாமி யோகரத்னா சரஸ்வதி நடத்தும் ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது விசா உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அது தொடர்பான விவரங்களை வழங்க குதினா தயங்கியதாக கூறப்படுகிறது. ஆவணங்கள் குகையில் தொலைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, கோகர்ணா காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் குகைக்குள் சென்று தேடியுள்ளனர். அப்போது, அங்கு ஆவணங்கள் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குதினா 2016 அக்டோபர் 18 அன்று வணிக விசாவில் இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது.

அந்த விசாவானது 2017 ஏப்ரல் 17, அன்று காலாவதியாகியுள்ளது. இதனால், வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியிருக்கும்போது சட்ட ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய FRRO, பனாஜியால் 2018 ஏப்ரல் 19 அன்று வெளியேறும் அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் நேபாளத்திற்குச் சென்று 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, நினா விசாக்காலம் முடிந்தும் இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்தது, தெரியவந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தப் பெண்ணும் அவரது மகள்களும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் கீழ் இயங்கும், கார்வாரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

விசா மீறல்கள் தொடர்பாக உத்தர கன்னட காவல்துறை கண்காணிப்பாளர், பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினரின் பிராந்திய பதிவு அலுவலகமான FRRO வை தொடர்புகொண்டு, நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன், ரஷ்ய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, அவரும் அவரது குழந்தைகளும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக, திருப்பி அனுப்பும் நடைமுறைகள் நடந்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies