BIG STORIES
சரக்கு ரயிலில் பற்றியெரிந்த தீ.. 8 மணி நேர போராட்டம்.. சுற்றுவட்டாரத்தை சூழ்ந்த கரும்புகை..
Jul 13, 2025 12:33 PM
87
சரக்கு ரயிலில் பற்றியெரிந்த தீ.. 8 மணி நேர போராட்டம்.. சுற்றுவட்டாரத்தை சூழ்ந்த கரும்புகை..
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் பற்றிய தீ சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீப்பிடிக்காத டேங்கர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தினர்.
சென்னை துறைமுகத்திலிருந்து 52 வேகன்களைக் கொண்ட சரக்கு ரயிலில் 45 வேகன்களில் டீசல் மற்றும் 5 வேகன்களில் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு, சரக்கு ரயில் ஒன்று வாலாஜா நோக்கிப் புறப்பட்டது.
அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தைக் கடந்த நேரத்தில், ரயிலின் 3வது வேகனில் தீப்பிடித்ததைக் கண்டு லோகோபைலட் உடனடியாக ரயிலை நிறுத்தியதாகவும், அப்போது சில வேகன்கள் தடம்புரண்டதாகவும் கூறப்படுகிறது. திருவள்ளூர் ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்தனர்.
இதற்குள் தீ மளமளவெனப் பரவி, 4 பெட்ரோல் வேகன்களும் 13 டீசல் வேகன்களும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இதன் காரணமாக அப்பகுதியில் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்தது.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினரும் 60 வீரர்களைக் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினரும் ரயிலில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு கருதி, சுற்றுவட்டார மக்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே வேகனிலிருந்த டீசல் அருகிலிருந்த கிணற்றில் சிதறியதில் கிணற்றிலும் தீப்பிடித்தது.
தீப்பிடிக்காத வேகன்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தள்ளிச் சென்று பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தினர்.
ரயில் விபத்து காரணமாக, சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், 5 ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டதாகவும் ரயில்வே தெரிவித்தது.
ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. விபத்து நேர்ந்த இடத்தில் அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், ரயில்வே ஐஜி பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினரின் 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதில் எரிபொருள் நிரம்பியிருந்த 2 வேகன்கள் அதீத வெப்பம் காரணமாக மீண்டும் தீப் பிடித்தன. அந்தத் தீயும் சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் 12 லட்சம் லிட்டர் எரிபொருள் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது. தடம்புரண்ட பெட்டிகளை கிரேன்களின் உதவியுடன் மீட்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்துத் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu