BIG STORIES
விமான விபத்து - நொடிக்கு நொடி என்ன நடந்தது..? வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிட வைக்கும் தகவல்கள்..
Jul 12, 2025 11:04 AM
170
விமான விபத்து - நொடிக்கு நொடி என்ன நடந்தது..? வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிட வைக்கும் தகவல்கள்..
260 பேர் பலியான அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான கடைசி தருணங்களில், நொடிக்கு நொடி என்ன நடந்தது என்ற திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன இரு எஞ்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகளும் நட்ட நடு வானில் கட்-ஆஃப் ஆகி வெறும் 32 விநாடிகளில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக முதற்பட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய ஏ.ஐ. 171 ஏர் இந்தியா விமானம் ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட சிறிது நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த 241 உட்பட் 260 பேரை பலிகொண்ட இந்த போயிங் ட்ரீம்லைனர் 787 விபத்து குறித்து ஏ.ஏ.ஐ.பி.எனப்படும் இந்திய விமான விபத்துப் புலனாய்வுப் பணியகம் விசாரணை நடத்தி 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், 2013-இல் வாங்கப்பட்ட விமானம், அண்மையில் வழக்கமான பராமரிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, அனைத்து தகுதி உத்தரவுகளும் பின்பற்றப்பட்டிருப்பதாகவும் விபத்து நடப்பதற்கு முன் இயந்திரங்களிலோ அல்லது விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்திலோ குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பாதையில் பறவைகளின் நடமாட்டம் பெரியளவில் பதிவாகவில்லை என்றும் விமான ஓடுபாதை எல்லையைக் கடப்பதற்கு முன்பே விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிற்பகல் 1 மணி 38 நிமிடம் 42 விநாடியில், விமானம் தனது அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகமான 180 நாட்ஸ் அளவை எட்டிய சிறிது நேரத்திலேயே, என்ஜின் 1 மற்றும் 2-க்கான எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகள் ஒரு விநாடி இடைவெளியில் கட்-ஆஃப் நிலைக்கு நகர்ந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் எஞ்ஜின்களில் எரிபொருள் விநியோகம் தடைபட்டு எஞ்ஜின்களின் சக்தி குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.
விமானி ஒருவர், ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள் என்று கேட்டதும், அதற்கு மற்றொரு விமானி தாம் கட்-ஆஃப் செய்யவில்லை என்று பதிலளித்ததும் காக்பிட் குரல் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. அப்போது கேப்டன் மேற்பார்வையில் விமானத்தை இணை விமானி இயக்கியுள்ளார். ஆனால் கேட்டது யார், பதில் கூறியது யார் என்பது தெரியவில்லை.
விமானம் உடனடியாக உயரத்தை இழக்கத் தொடங்கியதும் இரண்டு எஞ்ஜின்களையும் மீண்டும் இயக்கும் முயற்சியில் எரிபொருள் சுவிட்சுகளை விமானிகள் ஆன் செய்ததாக தெரிகிறது. சுமார் 10 விநாடிகளுக்குப் பின் என்ஜின் 1-இன் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்ச்சும் அடுத்த நான்கு விநாடிகளில் எஞ்சின் 2-இன் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சும் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் போதுமான உயரத்தை மீண்டும் அடைய விமானம் தவறிவிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சரியாக 9 விநாடிகள் கழித்து, பிற்பகல் 1 மணி 39 நிமிடம் 5 விநாடிக்கு விமானிகளில் ஒருவர் தரையில் இருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு "மேடே, மேடே, மேடே" என்ற அபாய செய்தியை அனுப்பியதாகவும், அவருக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையில் அடுத்த சில நொடிகளில் விமானம் நொறுங்கியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2018-இல் அமெரிக்க சிவில் விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பான எஃப்.ஏ.ஏ., போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் பொறிமுறையில் சிக்கல் ஏற்படலாம் என எச்சரித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள விசாரணை அறிக்கை, இது தொடர்பான பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை ஏர் இந்தியா செய்யவில்லை என்றும், ஆனால், சுவிட்ச் தொடர்பாக இதற்கு முன் குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
விபத்துக்கு எரிபொருள் பிரச்சினை அல்லது எஞ்ஜின் அடைப்பு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் ஏ.பி.யூ. வடிகட்டி மற்றும் இடது இறக்கை எரிபொருள் வால்விலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகளை சோதித்ததில், அவை திருப்திகரமானவை என்று கண்டறியப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் மணி நேர விமானப் பயணத்தை முடித்த 56 வயதான விமானி மற்றும் மூவாயிரத்து 400 மணி நேர விமானப் பயணத்தை முடித்த 32 வயதான இணை விமானி இருவரும் பணி முறைகேடுகள் அல்லது மருத்துவ பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பே அகமதாபாத்தை அடைந்து, போதுமான ஓய்வு எடுத்திருப்பதாகவும் விமானத்தில் ஏறும் முன், விமானிகள் மற்றும் விமானக் குழுவினருக்கு காலை 6 மணி 25 நிமிடத்துக்கு சுவாசப் பகுப்பாய்வு உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டு, விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், கூடுதல் ஆதாரங்கள், பதிவுகள் மற்றும் தகவல்களை மதிப்பாய்வு செய்த பின் வரும் மாதங்களில் இறுதி அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu