இந்தியா
நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா போயிங் விமான விபத்து காரணம் என்ன? விசாரணை அறிக்கையில் முக்கியத் தகவல்கள்...
Jul 12, 2025 10:27 AM
174
நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா போயிங் விமான விபத்து காரணம் என்ன?
260 பேர் பலியாக காரணமான அகமதாபாத் விமான விபத்துக்கு புறப்பட்ட மூன்றே வினாடிகளில் எரிபொருள் சப்ளை தடைபட்டு இரண்டு இன்ஜின்களும் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென்று செயலிழந்து போனதே காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜினுக்கு எரிபொருளை அனுப்ப உதவும் ஸ்விட்ச்கள் RUN நிலையில் இல்லாமல் OFF நிலைக்கு மாறியிருந்தது குறித்து விமானிகள் இருவரும் குழப்பத்துடன் உரையாடிய ஆடியோ பதிவும் வெளியாகியுள்ள நிலையில், பிரச்னைக்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப பிரச்னையா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்திற்காக காரணம் குறித்து விசாரணை நடத்திய விமான விபத்து விசாரணை முகமை, 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில், லண்டனை நோக்கி பறக்கத் தொடங்கிய மூன்றே வினாடிகளில் ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு இன்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் சப்ளை துண்டிக்கப்பட்டு இரு இன்ஜின்களும் திடீரென்று செயலிழந்துபோனதால் தொடர்ந்து பறக்க முடியாமல் கீழே விழுந்து வெடித்துச்சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மேலெழும்பிய சில விநாடிகளில் எரிபொருளுக்கான ஸ்விட்ச் ரன் என்ற நிலையில் இருந்து ஆஃப் நிலைக்கு ஒரு விநாடி நேரத்துக்குள் மாறியிருந்ததே இன்ஜின்களுக்கு எரிபொருள் சப்ளை துண்டிக்கப்பட காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் காக்பிட்டில் விமானிகளுக்கு இடையே நடந்த குழப்பமான உரையாடல் கருப்பு பெட்டியின் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. அதில் திடீரென எரிபொருள் சப்ளையை ஏன் கட் செய்தாய் என ஒரு விமானி கேட்பதும், மற்றொரு விமானி தான் அவ்வாறு செய்யவில்லை எனப் பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது. அதே சமயம் எரிபொருள் சப்ளை நின்றுபோய் இரு இன்ஜின்களும் செயலிழப்பதற்கு முன்பே விமானம் 180 நாட்ஸ் என்ற வேகத்தை எட்டியிருந்ததாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலைய சுற்று எல்லையைக் கடப்பதற்குள்ளாகவே விமானம் தொடர்ந்து மேலே எழும்பி பறக்கும் சக்தியை இழந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விமானம் பறக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே, RAT எனப்படும் ரேம் ஏர் டர்பைன் அமைப்பு செயல்பாட்டிற்கு வந்தது விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின்கள் மேலே எழும்பிய உடனேயே செயலிழந்துவிட்டது உறுதியாகிவிட்டதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஃப் நிலையில் இருந்த எரிபொருள் ஸ்விட்ச்களை மீண்டும் ரன் என்ற நிலைக்கு மாற்றி விமான இன்ஜின்களை மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்ய விமானிகள் முயற்சித்துள்ளனர். முதல் என்ஜின் சிறிது ஒத்துழைத்தாலும் இரண்டாவது என்ஜின் முழுமையாக ஒத்துழைக்காததால் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு விமானியிடமிருந்து ஆபத்துக்கால MAY DAY தகவல் வந்தும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அந்தத் தகவல் கிடைத்து அடுத்தகட்ட தகவல் பரிமாற்றத்துக்குள்ளாகவே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடத்தில் விமானத்தின் முகப்புப் பகுதி கிடந்த விதத்தைப் பார்க்கும்போது, விமானம் போதுமான பறக்கும் உயரத்தை எட்டுவதற்குள் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்துவதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து ஆயிரம் அடி சுற்றளவு வரை விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடந்தது, விபத்தின் வீரியத்தைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்ஜினுக்கு எரிபொருளை அனுப்ப உதவும் ஸ்விட்ச்கள் RUN நிலையில் இல்லாமல் OFF நிலைக்கு மாறியிருந்தது குறித்து விமானிகள் உரையாடலின் அடிப்படையில் பிரச்சனைக்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப பிரச்சனையா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே சமயம் ஒரு விமானத்தின் எரிபொருள் ஸ்விட்சுகளை விமானிகளால் தெரியாமலோ அல்லது எதேச்சையாகவே off செய்ய இயலாது என்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் விமானிகள் பேசிய உரையாடல் வெளியான நிலையில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
விமானத்தின் எரிபொருள் சப்ளை ஸ்விட்சை மனித செயல்பாட்டைத் தவிர வேறு எந்த நடவடிக்கையாலும் ஆன், ஆஃப் செய்ய முடியாது எனவும், டேக் ஆஃபின்போதோ, நடுவானில் விமானம் பறக்கும்போதோ எந்த விமானியும் எரிபொருள் சப்ளையை துண்டிக்க மாட்டார் எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேப்டன் சவுரப் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu