முகப்பு
எலேய்.. பங்காளியாக இருந்துட்டு அவனுக்கா சப்போர்ட் பண்ணுற ?.. 11 பேர் மீது காரை ஏற்றிய சம்பவம்..!.. காங் பிரமுகர் மகன் வெறிச்செயல்
May 04, 2025 01:51 PM
814
எலேய்.. பங்காளியாக இருந்துட்டு அவனுக்கா சப்போர்ட் பண்ணுற ?.. 11 பேர் மீது காரை ஏற்றிய சம்பவம்..!..
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன் கோவில் மற்றும் அருகிலுள்ள தெற்குத் தரவை கிராமங்களைச் சேர்ந்த சாத்தையா (55), சிவா (35), பழனி குமார் (30) ஆகியோரிடம், பரமக்குடி பொன்னையாபுரத்தை ராமநாத பிரபு ( 30) என்பவர் ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஐ.டி யை கணிசமான தொகைக்கு விற்றுள்ளார்.
பேசியபடி அதற்குரிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாக இவர்களுக்கும் ராமநாத பிரபுவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ராமநாதபுரம் புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள அம்மன் கோவில் கிராமத்திற்கு ராம நாத பிரபு காரில் சென்று உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ராம நாத பிரபுவின் காரில் உரசியதாகவும் அவரது காரின் சைடு மிரர் உடைந்து போனதாகவும் கூறப்படுகின்றது.
அவர் காரை விட்டு இறங்கி லாரி ஓட்டுனருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஆன் லைன் ஐ.டி வாங்கிய சாத்தையா மற்றும் அவரது ஊர்க்காரர்கள் லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசி அங்கிருந்து லாரியை எடுத்து போக செய்ததாக கூறப்படுகின்றது. மேலும் அவரையும் சத்தம் போட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஆன் லைன் ரம்மி ஐ.டிக்கு தனக்கு வரவேண்டிய பணத்தை தராத ஆத்திரத்திலும், லாரி ஓட்டுனரை அனுப்பிவிட்ட கோபத்திலும் இருந்த ராமநாத பிரபு , தனது ஐ20 காரை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
200 மீட்டர் தூரம் சென்றவர் மீண்டும் காரை திருப்பிக் கொண்டு வேகமாக வந்து தன்னை விரட்டிய கூட்டத்தின் மீது வேண்டுமென்றே பயங்கரமாக காரை வைத்து மோதி உள்ளார்.
இதில் சிக்கி பலரும் தூக்கி வீசப்பட்டனர். அதன் பின்னரும் அடங்காத ராமநாத பிரபு, தனக்கு பணம் தர வேண்டிய சிவா, சாத்தையா, பழனிக்குமார் ஆகியோர் மீது 3 முறைக்கும் மேலாக மீண்டும் மீண்டும் காரை விட்டு ஏற்றியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
11 பேர் காயமடைந்து எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடக்க அவர்களின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த ஊர் மக்கள் ராம நாத பிரபுவின் காரை கல்வீசி அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 11 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகர், கேணிக்கரை, பஜார் உள்ளிட்ட காவல் நிலையம் காவலர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு அங்கு சூழ்ந்திருந்த உறவினர்களை அப்புறப்படுத்தினர்.
காயமடைந்தவர்களில் அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் (37), வள்ளி மாடன் வலசை சேர்ந்த சிவா (30), ரித்திக்குமார் (20), பிரசாந்த் (25), முத்துக்குமார் (19), மனோஜ் (24), தெய்வேந்திர சூர்யா (25), சாத்தையா (55) உட்பட எட்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டனர்.
அதில் சாத்தையா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உதய் பிரகாஷ் ( 21) உள்ளிட்ட நால்வர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் காரை ஏற்றி கொலைவெறி தாக்குதல் நடத்திய ராமநாத பிரபுவும் தாக்குதலில் காயமடைந்ததால் அவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சினிமாவை மிஞ்சும் வகையில் நிஜத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ராமநாத பிரபு மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை வெறிதாக்குதலில் ஈடுபட்ட ராம நாத பிரபுவின் தந்தை பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்று கூறப்படும் நிலையில் இந்த சம்பவ பின்னணியில் அவருக்கு தொடர்புள்ளதா ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu