முகப்பு
7 வீடுகளுக்கு சீல் வைத்த சோழமண்டலம் பைனான்ஸ் வீதியில் தவிக்கும் குடும்பங்கள்..! வீட்டுக்கடன் தவணையால் சிக்கல்
May 01, 2025 02:44 AM
4830
7 வீடுகளுக்கு சீல் வைத்த சோழமண்டலம் பைனான்ஸ் வீதியில் தவிக்கும் குடும்பங்கள்..! வீட்டுக்கடன் தவணையால் சிக்கல்
பல்லடம் அருகே சோழ மண்டலம் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து பெற்ற கடனுக்கு உரிய தவணை தொகையை செலுத்த தவறியதாக கூறி நீதிமன்ற உத்தரவு பெற்று நிதி நிறுவன அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக 7 வீடுகளை பூட்டி சீல் வைத்ததால் அதில் வாடகைக்கு இருந்தவர்கள் வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பார்த்து பார்த்து கட்டிய வீட்டை கையகப்படுத்த வந்த பைனான்ஸ் நிறுவன வழக்கறிஞர்களை கண்டித்து எலி மருந்தை குடித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேற மறுத்து பெண் கதறி அழுத பரிதாப காட்சிகள் தான் இவை..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது மனைவி கீதா என்பவருடன் வசித்து வருகிறார். சயான் பின்னலாடை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள சோழமண்டலம் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்துவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து 43 லட்சம் ரூபாய் கடன் பெற்று கூடுதலாக ஆறு வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். பத்து வருடங்களுக்கு கடன் தொகையை மாத மாதம் 63 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் கட்ட வேண்டும் என்று கூறப்படுகின்றது
மாதந்தோறும் 63 ஆயிரம் ரூபாய் விகிதத்தில் கடந்த இரண்டு வருடங்களாக முறையாக கடனை செலுத்தி வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சயன் உடல் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நான்கு மாதங்களாக கடன் தொகையை கட்டாததால் தொடர்ச்சியாக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை கட்ட சொல்லி போன் மூலமாக அழைத்துள்ளனர்.
சென்னையில் இருந்து திரும்பிய சயன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நான்கு மாத கடன் தொகையையும் மொத்தமாக செலுத்தியுள்ளார். தவணையை தாமதமாக கட்டியதால் அந்தத் தொகை முழுமையாக செயலாக்க கட்டணத்திற்கு சரியாகிவிட்டது என கூறிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எனக் கூறி 30 பேர் புதன்கிழமை சயன் வீட்டிற்கு வந்தனர்.
கடன் தொகையை கட்டாததால் உனது வீட்டை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்கிறோம் எனக் கூறி சயன் வசிக்கும் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த ஆறு வீடுகள் என ஏழு வீடுகளுக்கு தனி தனியாக சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். பத்து நாட்களுக்குள் மொத்த தொகையையும் கட்டி விடுகிறேன் என சயன் அவகாசம் கேட்டும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஏழு வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்தனர்.
இச்சம்பவத்தால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதோடு வீட்டை விட்டு வெளியே மறுத்து அழுது புலம்பினார்
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வாடகைக்கு தங்கி இருக்கும் ஆறு குடும்பத்தினர் பணி முடிந்து வீடு திரும்பியபோது வீடு சீல் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவு தங்க இடமில்லாமல் குழந்தைகளோடு வீதியில் தவித்து நின்றனர். கடனாக கொடுத்த 45 லட்சம் கடனுக்காக இதுவரை 17 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து வசூலித்ததோடு, 7 வீட்டையும் மொத்தமாக சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டதாக சயான் குற்றஞ்சாட்டினார்
இது தொடர்பாக சோழ மண்டலம் நிதி நிறுவனம் வீட்டிற்கு வெளியே ஒட்டியுள்ள அறிவிப்பில் திருப்பூர் தலைமை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவு படி வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டிற்குள் யாரும் அத்து மீறி நுழையக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டதொடரில் , கடன் தொகையை வசூலிக்க வங்கிகள் கெடுபிடி காட்டக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைசிவரை எந்த ஒரு காவல்துறையினரும் அங்கு வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu