BIG STORIES
இன்னோவா அரக்கன்.. தூங்கு மூஞ்சி ஓட்டுனர்.. குடும்பமே பலியான சோகம்..! ஓட்டுனர்கள் இதை செய்யாதீங்க
Apr 29, 2025 02:09 AM
1273
இன்னோவா அரக்கன்.. தூங்கு மூஞ்சி ஓட்டுனர்.. குடும்பமே பலியான சோகம்..!
எங்கேயும் எப்போதும்... சாலை விபத்து எங்கே ? எப்படி ? யாருக்கு யாரால் நடக்கும் என்று தெரியாது... ஒரு அதிவேக கார் ஓட்டுனரின் தூக்கத்தால்... சரியான திசையில், முறையான வேகத்தில் சரியான சாலையில் காரில் பயணித்த ஒரு குடும்பமே மரணித்துள்ளது.. ஓட்டுனர்களுக்கு அதிகாலையில் கண் அயரும் சரி.. அந்த மாலையிலும் உண்ட மயக்கத்தில் கண் அயர்ந்தால்.. என்ன செய்வது..?
குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல வாடகை கார் பிடிப்பதற்கு பதிலாக... செலவுகளை சுருக்குவதாக நினைத்து நண்பரின் காரை இரவல் வாங்கிச்சென்று அதிவேகமாக ஓட்டி ஒரு மோசமான விபத்தை நிகழ்த்தி இருக்கிறார் அந்த பேட் டிரைவர்..!
திடீர் ஓட்டுனரின் தவறால் 7 உயிர்களை பலி கொண்ட இந்த கோர விபத்து நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே நிகழ்ந்துள்ளது..!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கண்ணங்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன், கட்டிடத்தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சாமி கும்பிட்டு செல்வதற்காக தனது நண்பரின் பழைய இன்னோவா காரை இரவல் வாங்கிச்சென்றார். அங்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது மாரியப்பன் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகின்றது. அந்த காரில் மாரியப்பனின் மனைவி அன்பரசி, மகன்கள் பிரவின் (10), அசின் (8) உறவினர்களான அட்சயா தேவி , பாலகிருஷ்ண வேணி, பிரியதர்ஷினி , சுபி சந்தோஷ் மில்கிஷ் ஆகிய 9 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.
மாலை 4 மணி அளவில் உணவு உண்ட மயக்கத்தில் மாரியப்பன் காரை ஓட்டி வந்துள்ளார். வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் , கீழூர் பகுதியில் உள்ள பாலம் இறங்கியதும் வரும் சாலை வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் செண்டர் மீடியனில் மோதி எதிர்புற சாலைக்கு பாய்ந்தது. அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஸ்விப்ட் டிசயர் கார் மீது இன்னோவா கார் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஸ்விப்ட் டிசயர் காரில் வந்த நெல்லை பாளையங்கோட்டை அடுத்த டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த தனுஷ்லாஸ் அவருடைய மனைவி மார்க்ரெட்மேரி , இவர்களுடைய மகன் ஜோபாட் , அவருடைய மனைவி அமுதா , இவர்களுடைய மகன்கள் ஜோஹன், ஜோஹனர், 6 பேரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மார்க்ரெட்மேரி uடல் தூக்கி வீசப்பட்டு சாலையில் கிடந்தது.
இந்த கோர விபத்தில் மாரியப்பனுடன் காரில் பயணித்த மில்கிஸ் என்பவரும் உயிரிழந்தார். மொத்தம் 7 உயிர்களை பலி கொண்ட இந்த விபத்தில் ஸ்விப்ட் காரில் வந்த ஜோதினா என்ற இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் குறித்து தகவல் அறிந்தது விரைந்து வந்த போலீசார் அந்தவழியாக வந்த வாகன ஓட்டிகள் உதவியுடன் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.
லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இன்னோவா கார் ஓட்டுனர் மாரியப்பனிடம் விசாரித்த போது 120 கிலோ மீட்டர் ஸ்பீடில் வந்ததாகவும், அப்போது தனது கண் அயர்ந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி எதிர் புற சாலையில் சென்று கார் மீது மோதியதாக தெரிவித்தார்
இந்த விபத்தில் பலியான தணிஸ்லாஸ் உள்ளிட்ட 6 பேரின் உடல்களும் பிணக்கூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 பேரின் உடல்களையும் மயிலோடு கிராமத்தில் உள்ள வீட்டின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது
ஓட்டுனர் மாரியப்பனின் அதிவேகம் மற்றும் தூக்கம் ஒரு குடும்பத்தையே காவுவாங்கியதோடு அவரது உறவினரின் உயிரிழப்புக்கும் காரணமாகி உள்ளது. இது போன்ற தருணங்களில் ஓட்டுனரின் அருகில் அமர்ந்திருக்கும் நபர்கள் விழிப்புடன் இருந்து அதிவேகம் செல்வதை தடுப்பது அவசியம், மேலும் ஓட்டுனரிடம் உரையாடிக் கொண்டே சென்றால் ஓட்டுனருக்கு தூக்கம் வராது என்று சுட்டிகாட்டும் போலீசார், விபத்துக்கு காரணமான மாரியப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் , சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு, சொந்த ஊர்களுக்கும், குலதெய்வ கோவில்களுக்கும் குடும்பத்துடன் வண்டி வாகனங்களின் செல்வோர் மிகுந்த கவனத்துடன் , மிதமான வேகத்தில் பயணிக்கவேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் கார் ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும், குறிப்பாக தொலைதூர பயணங்களுக்கு புறப்படும் முன்பாக காரில் டயர்கள், பிரேக் ஆயில், கூளிங் ஆயில் போன்ற வை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சமவெளிபகுதிகளில் வாகனங்களை இயக்குவதற்கும், மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று குறிப்பிடும் வாகன பழுது நீக்குவோர் , எரிபொருளை மிச்சப்படுத்துவதாக நினைத்து கியர்களை பயன்படுத்தாமல் மலைச்சாலையில் இறங்கும் போது சில நேரங்களில் வாகனம் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது என்கின்றனர்.
கார் ஓட்டுனர்கள் முகத்தை கழுவி விட்டு ஏசி காரை இயக்கினால் அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் மீண்டும் தூக்கம் வந்து விடும், அதனால் ஏசி கார் ஓட்டுனர்கள் முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும், டீ அருந்தலாம், ஏசிக்கு வெளியில் இருந்து காற்று உள்ளே வருவது போல வைத்தால் ஓட்டுனருக்கு தூக்கம் வராது. தேசிய நெடுஞ்சாலைகளில் 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்வதை தவிர்த்து நிதானமாக விழிப்புடன் வாகனத்தை இயக்கினால் சிறு விபத்துக்களை கூட தவிர்க்கலாம்.
விதியை மதியால் வெல்லலாம் என்பது போல விழிப்புடன் இருந்தால் விபத்தை வெல்லாம் அதை விடுத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் பலிக்கு காரணமாக இருந்தால் அங்கங்களில் பங்கம் நேரும், சட்டம் தண்டனை தரும்.. குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu