BIG STORIES
அமைச்சர் பதவியா? சிறையா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு..!!
Apr 24, 2025 01:41 AM
764
அமைச்சர் பதவியா? சிறையா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு..!!
அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமீன் வேண்டுமா? என்பதை திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் திங்கட்கிழமை தாம் வாதாடப்போவதில்லை என்றும் நீதிமன்றம் அளித்த 2 ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து துறையில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நன்னடத்தை அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை, அடிப்படை உரிமை பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஜாமீன் தரப்பட்டதாக நீதிபதிகள் விளக்கமளித்தனர். ஜாமீன் உத்தரவு பிறப்பித்த போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாத நிலையில், அப்போது இருந்த சூழல் வேறு, தற்போதைய சூழல் வேறு என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அமைச்சராக இருந்த போது புகார்தாரர்களுடன் செட்டில்மென்ட் செய்து கொண்டது செந்தில் பாலாஜிக்கு நினைவில்லையா? என கேட்ட நீதிபதிகள், தற்போது அவர் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கமாட்டார் என்பதில் என்ன உறுதி? என்றும் வினவியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீன் என்பது சாட்சிகளை கலைப்பதற்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ் இல்லை என காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரியதையும் நிராகரித்தனர். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என சிறப்பு மனு தாக்கல் செய்து ஜாமீன் பெறப்பட்ட நிலையில், அதன் பிறகு அவர் அமைச்சரானதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி தவறு செய்தார் என்பது தான் வழக்கு என்ற நிலையில் மீண்டும் அவர் எப்படி அமைச்சரானார்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டார் என்பதை தங்களால் ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், அவர் சாட்சிகளை சாட்சிக் கூண்டிற்கு கூட வரவிடாமல் தடுப்பதாக கண்டித்தனர்.
ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தை செந்தில் பாலாஜி சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கியதையே தவறானது என தாங்கள் கருதுவதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இதனையத்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபலின் வேண்டுகோளை ஏற்று வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கபில் சிபல் திங்கட்கிழமை தாம் வாதாடப்போவதில்லை என்றும் நீதிமன்றம் அளித்த 2 ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu