BIG STORIES
குதிரை சவாரி விபரீதம்.. சிறுவனை சாலையில் இழுத்துச் சென்றது ஏன் ?.. பதை பதைக்கும் காட்சிகள்
Apr 23, 2025 01:58 AM
835
குதிரை சவாரி விபரீதம்.. சிறுவனை சாலையில் இழுத்துச் சென்றது ஏன் ?.. பதை பதைக்கும் காட்சிகள்
கொடைக்கனலில் 9 வயது சிறுவன் குதிரை சவாரி சென்ற போது மிரண்டு ஓடிய குதிரை காரில் உரசியதால் சிறுவன் தவறி விழுந்து சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது, இந்த ஏரிக்கும் வரும் சுற்றுலாப்பயணிகள் ஏரியில் படகு சவாரி மேற்கொள்வதுடன்,ஏரியை சுற்றி சாலையில் இயற்கை அழகை ரசித்தபடி குதிரை சவாரி மேற்கொள்வதும் வழக்கம்.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் இருந்து குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த 9 வயது சிறுவன் ஜோயல் ஆசைப்பட்ட படி ஏரிச்சாலையில் குதிரை சவாரி மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
சிறுவனின் பெற்றோர் , குதிரையில் அமர்ந்திருந்த தங்கள் மகனை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது குதிரை ஒன்று வேகமாக ஓடி வந்தது. அதில் ஒரு குதிரையில் வந்த பெண்மணி தவறி கீழே விழுந்துள்ளார். துள்ளிக்குதித்த அந்த குதிரையை கண்டு சிறுவன் அமர்ந்திருந்த குதிரை மிரண்டு போய் ஓடத்தொடங்கியது.
ஏரிச்சாலையில் இருந்து 7 ரோடு வழியாக அதிவேகத்தில் ஓடிய குதிரையின் மேல் கூச்சலிட்டபடி பதறிக் கொண்டு இருந்தான் சிறுவன், அப்போது எதிரில் வந்த கார் மீது குதிரை உரசியதால் சிறுவன் தவறி சாலையில் விழுந்தான்
குதிரையின் மேல் அமர்ந்து கால் வைக்கும் பெல்டில் உள்ள இரும்பு மிதியடியில் சிறுவன் காலில் அணிந்திருந்த ஷூ மாட்டிக் கொண்டதால், சிறுவனை தர தரவென சாலையில் இழுத்துக்கொண்டே குதிரை தொடர்ந்து ஓடியது
குதிரைக்கு பின்னால் உள்ளூர் மக்களும் , வியாபாரிகளும், சிறுவனின் குடும்பத்தினரும் சிறுவனை காப்பாற்றுவதற்காக பதறியடித்தபடி ஓடிச்சென்றனர்.
ஒரு இடத்தில் சிறுவனின் காலில் இருந்த ஷூ கழன்று கொண்டதோடு, பெல்ட்டும் அறுந்து கொண்டது. இதனால் அதுவரை இழுத்துச்செல்லப்பட்ட சிறுவன் வேகமாக சாலையில் விழுந்து மூர்ச்சையானான்.
உடனடியாக ஓடிச்சென்று சிறுவனை தூக்கிய பொதுமக்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவமனையில் மயக்கம் தெளிந்த நிலையில் தனக்கு நேர்ந்த பயங்கரமான நிகழ்வை மறக்க இயலாமல் காயத்துடன் சிறுவன் அலறித்துடித்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
சம்பவம் தொடர்பாக குதிரையின் உரிமையாளரான பாண்டியராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை சவாரி அழைத்துச் செல்லும் குதிரைக்காரர்கள், உடன் நடந்து செல்வதற்கு கஷ்டப்பட்டு சைக்கில் ஓட்டியபடி குதிரை உடன் செல்வதாகவும், அதிலும் ஒரு சிலர் மட்டுமே குதிரையின் கடிவாளைத்தை கையில் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் முதலில் பெண் ஓட்டி வந்த குதிரையை மடக்கிப் பிடிக்க குதிரைக்காரர்கள் மொத்தமாக சென்று விட்டதால், சிறுவன் அமர்ந்திருந்த குதிரையை பிடிக்க இயலாமல் போனது தெரியவந்தது.
பொதுவாக கடிவாளத்துடன் இருக்கும் கயிற்றை அனுபவமிக்க குதிரையோட்டிகளால் மட்டுமே லாவகமாக இழுத்து குதிரையை கட்டுக்குள் வைத்திருக்க இயலும்.
சுற்றுலா தளங்களில் குதிரைசவாரி செல்லும் போது குதிரையின் மேல் அமரும் இருக்கையின் முன் பகுதில் இருக்கும் கம்பியை இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும்,
மேலும் பைக் ரைடிங் செல்லும் போது பாதுகாப்புக்கு அணிந்திருப்பது போன்று, குதிரை சவாரிக்கும் தலைக்கவசம், கை மற்றும் கால் முட்டி பகுதிகளில் சேப்கார்டு அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu