முகப்பு
போலீஸ் ஆசையில் பலியான இளைஞர்.. 4 உயிர்களை காத்தார்..! ஊரே கூடி மலர்தூவி அஞ்சலி
Apr 17, 2025 12:54 AM
637
போலீஸ் ஆசையில் பலியான இளைஞர்.. 4 உயிர்களை காத்தார்..!
சாலையில் கிடந்த தென்னமட்டையில் பைக் சறுக்கியதால், காவல்துறையில் சேரும் கனவோடு இருந்த மதுரை இளைஞர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். தனது மகன் மறைந்த பின்னரும் 4 பேர் உயிர் வாழ்வதற்கு, உடல் உறுப்புகளை தானமாக கொடுத்திருப்பதாக தாய் துக்கத்துடன் பெருமிதம் தெரிவித்தார்..
மதுரை மாநகர் பெத்தானியபுரத்தை சேர்ந்த முருகன் - பாண்டி செல்வி தம்பதியினருக்கு வினோத்குமார் , மற்றும் வினோதினி ஆகிய 2 பிள்ளைகள் இருந்தனர் .
24 வயதான வினோத்குமார் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த நிலையில் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது ஆசையில் போட்டித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்
இந்நிலையில் தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது சாலையில் கிடந்த தென்னை மட்டையில் அவர் சென்ற பைக் ஏறி சறுக்கியதில், பைக் தடுமாறி கீழே விழுந்தது.
இதில் பைக்கை ஓட்டிச் சென்ற நண்பருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வினோத்குமார் கீழே விழுந்த வேகத்தில் தலையின் பின்பக்கத்தில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தார்
அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்தார். கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வினோத்குமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத்குமார் மூளைச்சாவு அடைந்ததாக கூறினர்
இதனைதொடர்ந்து வினோத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து வினோத்குமாரின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டு அவரது உடல் உறுப்புகள் மறுவாழ்விற்காக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது மருத்துவமனையில் கூடியிருந்த வினோத்குமாரின் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடி கண்ணீர்மல்க அழுதனர். உடல் உறுப்புக்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட போது வினோத்குமாரின் தாய் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டார். அவருடைய நண்பர்களை பார்த்து, “என் புள்ள நல்ல புள்ளையா இருந்தான் , நீங்களும் உங்க அம்மாவிற்கு புடிச்ச மாதிரி எந்த தப்பான பழக்கமும் இல்லாமல் நல்ல பிள்ளையா இருங்க அவனோட ஆசையும் அதுதான் உங்கள கையெடுத்து கும்பிடுகிறேன்” என்று கதறி அழுதார்
தனது மகன் வாழும் போதும் பலருக்கு உதவியாக இருந்தான் , இப்ப மறைந்தாலும் 4 பேர் உயிர் வாழ உறுப்புகள தானமாக கொடுத்திருக்கான், எம்புள்ள சாகல அவங்க மூலமா இன்னமும் உயிர் வாழ்கிறான் என்று கூறினார்
தொடர்ந்து அரசு மரியாதையுடன் மருத்துவர்கள் , வினோத்குமார் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது மகனின் லட்சிய ஆசையான காக்கி சீருடையை அவரது உடல் மீது போர்த்திய தாய் பாண்டி செல்வி உடைந்து அழுதார்
தொடர்ந்து நண்பர்கள் புடை சூழ வினோத்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மறைந்தும் வாழலாம் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu