முகப்பு
60 மணிநேர அட்டாக் 166 மனித உயிர்கள் பலி...அமெரிக்கா சிறை டூ டெல்லி..! விலங்கிட்டு தூக்கிவரப்பட்ட ராணா
Apr 13, 2025 02:49 AM
122
60 மணிநேர அட்டாக் 166 மனித உயிர்கள் பலி...அமெரிக்கா சிறை டூ டெல்லி..! விலங்கிட்டு தூக்கிவரப்பட்ட ராணா
உலகத்தையே அதிரவைத்த 60 மணிநேர அட்டாக்...166 பேரை பலிகொண்ட துப்பாக்கிச்சூடு...அமெரிக்காவில் 14 வருட சிறை... டெல்லியில் என்.ஐ.ஏ. விசாரணை... 20 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பரபரப்பாக பேசப்படும் பின்னணி என்ன? யார் இந்த ராணா? என்பது குறித்து செய்தி தொகுப்புதான் இது...
ராணா என்கிற தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்து வந்தது. ஆனால், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான்ராபர்ட்ஸுக்கு ஒரு அவசர மனுவை அண்மையில் ராணா அனுப்பியிருந்தார். ஆனால், ராணாவின் மனு நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தின் இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதனால், என.ஐ.ஏ மற்றும் உளவு அமைப்பான 'ரா' அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா விரைந்தது. அக்குழு, ராணாவை இந்தியா அழைத்து வர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் அடங்கிய இந்திய குழுவினரிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்துதான், நீண்ட போராட்டத்திற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி ராணா சிறப்பு விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ராணா, 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதுவும் ராணா கை கால்களில் விலங்குடன் நாடுகடத்தப்பட்டுள்ள 2 புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் இந்தியாவின் வாதங்களை வழிநடத்திய மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், தற்போது டெல்லியில் ராணாவின் வழக்கை நடத்த உள்ளார். 2012 டெல்லி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக இருந்தவர், தயான் கிருஷ்ணன. மேலும் சிகாகோவில் ஹெட்லியை விசாரித்த என்ஐஏ குழுவிற்கும் தலைமை தாங்கியவர். சிறப்பு வழக்கறிஞர் தயான் கிருஷ்ணனுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்தர் மானும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞரான நரேந்திர மான், ஜெயின்-டைரி ஹவாலா வழக்கு, காமன்வெல்த் ஊழல் மற்றும் போஃபர்ஸ் ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிபிஐ சார்பில் வாதாடியவர் என கூறப்படுகிறது.
இவ்வளவு பெரிய சட்ட வல்லுநர்கள் எல்லாம் ராணாவின் வழக்கிற்குள் வரவேண்டிய பின்னணி என்ன? ராணா, அமெரிக்காவில் 14 வருட சிறை தண்டனை பெற்ற காரணம் என்ன? அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது, உலக நாடுகளை அதிரவைத்த அந்த அட்டாக்கை!
2008 நவம்பர் 26 ஆம் தேதி...இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்தடுத்து அட்டாக்... மும்பை தாஜ் ஹோட்டல், ஒபேராய் ஓட்டல், நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில்
புகுந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். 60 மணி நேரம் நடந்த இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 6 அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 238 பேர் படுகாயம் அடைந்தனர்.
இப்படியொரு பெரும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் -அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பர்தான் இந்த தஹாவூர் ராணா.
கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணாவிற்கு லஷ்கர் -ஏ- தொய்பா மற்றும் ஹர்கத் - அல்- ஜிஹாதி உள்ளிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக, விசாரணையில் தெரியவந்தது.
ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் மூலமே, மும்பை தாக்குதலுக்கு உளவு மற்றும் திட்டமிடல்களில் ஈடுபட்டார், ஹெட்லி என்பதும் தெரியவந்தது.
இதனால், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் 14 வருட சிறை தண்டை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில்தான், இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசு கோரிக்கை வைத்து வந்தது. இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது என்ற ராணாவின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதி அளித்தது. இந்தநிலையில்தான், அவர் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு, என்.ஐ.ஏ. விசாரணை, 18 நாட்கள் நீதிமன்ற காவல் என வைக்கப்பட்டுள்ளார்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்ட நிலையில், பின்னர் அவனுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில்தான், இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்த ராணாவை இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு அமெரிக்காவிடம் போராடி, கைது செய்திருக்கிறது, இந்தியா.
“உலகளாவிய பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று தெரிவித்திருந்தார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கடந்த பிப்ரவரி பிரதமர் மோடியின் பயணத்தின்போதே, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாக ட்ரம்ப் உறுதி அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu