விடிஞ்சா கல்யாணம்..... மணப்பெண் வீட்டில் புகுந்து காதலன் வெறிச் செயல்..!
விடிந்தால், காதலிக்கு திருமணம் என்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மணப்பெண்ணின் தந்தையை வெட்டிக் கொலை செய்ததாக காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. சுமார் 25 வருடங்களாக வெளிநாட்டில் வேலைப்பார்த்து விட்டு ஊர் திரும்பிய இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.
ராஜூவின் மகள் ஸ்ரீலெட்சுமி பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜிஷ்ணு என்ற இளைஞரை ஓராண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மகளின் காதல் விவகாரம் தெரிய வரவே, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் ராஜூ.
இந்நிலையில், ஸ்ரீலெட்சுமிக்கு சரியான வரனாக ஜிஷ்ணு இருக்கமாட்டான் எனவும், மோசமான நடத்தை கொண்டவன் ஜிஷ்ணு எனவும் உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, மகளின் திருமண ஏற்பாடுகளை நிறுத்திய ராஜூ, அவசர அவசரமாக வேறொரு மாப்பிள்ளையையும் தேர்வு செய்துள்ளார்.
செவ்வாய் இரவில் வேறு ஒரு மாப்பிள்ளையுடன் ஸ்ரீலட்சுமிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து சொந்த பந்தங்கள் வீடு திரும்பிய நிலையில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் ராஜூ வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது, 4 பேருடன் வந்த ஜிஷ்ணு, தான் காதலித்த பெண்ணை எப்படி வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கலாம் எனக் கேட்டு ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது மறைத்து எடுத்து வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் ராஜூவை, கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற உறவினர்கள் சிலரையும் அந்த கும்பல் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
படுகாயமடைந்த ராஜுவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விடிந்தால் கல்யாணம் என சந்தோஷத்தில் நிரம்பியிருந்த வீடு ராஜூவின் இறப்பினால் துக்க வீடாகா மாறியது.. மங்கள இசை கொட்ட வேண்டிய இடத்தில் மரண ஓலம் கேட்டது...
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கல்லம்பலம் போலீஸார், ஜிஷ்ணு அவரது சகோதரர் ஜிஜின் மற்றும் அவரது நண்பர்களான ஷியாம், மனு ஆகியோரை கைது செய்தனர்..
மணமகளின் தந்தை இறந்ததால் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
Comments