தமிழக திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எஞ்சினாக உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எஞ்சினாக உள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் சில திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக கூறினார்.
முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட 26 மாவட்டங்களின் பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்த முதலமைச்சர், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை துவக்கிவைத்தார்.
சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி அலுவலக கட்டடங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஒரு புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
சமூக சேவகரான "பாலம்" கலியாண சுந்தரத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையினையும் முதலமைச்சர் வழங்கினார்.
Comments