அபராதமா போடுறீங்க..? போக்குவரத்து போலீஸை நடுங்க வைத்த சம்பவம்..! ரோந்து வாகனங்கள் சேதம்
பழனியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பைக் ஓட்டி வந்த இளைஞருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை, கூட்டாளிகளை அழைத்து வந்து மிரட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் தியாகராஜன், குமரேசன் மற்றும் காவலர் சுந்தர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை நிறுத்தி விசாரித்தனர்.
வாகனத்தை ஓட்டிவந்த நபருக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு புத்தகமும் இல்லாமல் இருந்தது.இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரித்ததில் தனது பெயர் அராபத் என்றும், தந்தை பெயர் சாதிக் என்றும் தெரிவித்துவிட்டு, முகவரியை கூற மறுத்ததால், அவர் ஓட்டி வந்த வாகனத்திற்கு அபராதம் விதித்து போலீசார் ரசீதை கொடுத்தனர்.
தொடர்ந்து ரசீதை வாங்கிச் சென்ற அராபத் சிறிதுநேரத்தில், தனது கூட்டாளிகள் இருவரை அழைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசாரை தேடி வந்துள்ளார். அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போலீசாரை கண்டதும், ஹோட்டலுக்குள் சென்று போலீசாரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
மிரட்டல் விடுத்த மூவரும், சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த போக்குவரத்து காவலர்களின் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவில் இழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக பழனி நகர சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்த பூக்கடை அராபத் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
Comments