சென்னையில் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க ஏதுவாக தகவல் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பானுமதி என்பவர் தனது மகன் யுவராஜ் மற்றும் மகள்கள் ஷீலா, சுகன்யா ஆகியோருடன் ஏலச்சீட்டு நடத்தினார். பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளிப் பரிசு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் பானுமதி தலைமறைவானார்.
அவர்களிடம் பணம் கட்டி ஏமாந்த 100 பேர் சென்னை கிண்டியில் உள்ள சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பானுமதி குடும்பத்தினர் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பானுமதிக்கு சொந்தமான ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
தொடர்ந்து பணம் கட்டி ஏமாந்தவர்களுக்கு திருப்பி வழங்கும் நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செய்துள்ளனர். இந்நிலையில் பானுமதி குடும்பத்தினரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் ((044 - 22504332, 94981 43072)) தகவல் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.