கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் : மாவட்ட நிர்வாகம், கோயில் ஊழியர்களுக்கு முதலமைச்சர் நன்றி

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள், அத்திவரதரன் தரிசனம் பெற்றிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும், தேசிய மாணவர் படையினரும், தன்னார்வலர்களும், ஒருங்கிணைந்து மிகச்சிறப்பாக பணியாற்றியதால், வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை சிறப்பாக தரிசிக்க முடிந்ததாக, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும், இரவு-பகல் பாராமல், ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாக, அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அத்திவரதர் தரிசனம் நடைபெற்ற நாட்களில், இரவு 12 மணி முதல், அதிகாலை 4 மணிக்குள்ளாக, கண் விழித்து, காஞ்சிபுரம் நகரில், தூய்மை பணிகளில் ஈடுபட்ட, துப்பரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments