இந்தியா
5 வருடமாக சிறையில் கணவன்.. லவ்வருடன் வந்த ‘கொலையான’ மனைவி.. ஏப்ரல் ஃபூல் போலீஸ்.. எத்தனை டுவிஸ்ட்?
Apr 05, 2025 05:17 AM
359
5 வருடமாக சிறையில் கணவன்
ஏப்ரல்- 1 ஆம் தேதி போலீஸாருக்கு ஒரு ஃபோன் கால் வந்துள்ளது. ஆனால், சீரியஸான ஒரு கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளி யார்? இதில், முட்டாளாக்கப்பட்டது யார்? என்பதை விளக்குகிறது, ஓ.டி.டி. கிரைம் திரில்லர் கதைகளை மிஞ்சிய, டிவிஸ்ட்கள் நிறைந்த, இந்த கிரைம் சம்பவம்.
கர்நாடக மாநிலம், மைசூர் குஷால் நகரின் பசவனஹள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ். மல்லிகே என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டு 18 வருடம் ஆகிவிட்டன. இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தனது மனைவி மல்லிகேவை காணவில்லை என காவல்நிலையத்தில் புகர் கொடுத்தார், கணவர் சுரேஷ்.
காவல்துறையும் கணவர் சுரேஷும் மல்லிகேவை தேடிவந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு பின் பெட்டதபுரா என்கிற பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது. இதனால், காவல்துறைக்கு மல்லிகேவின் கணவர் சுரேஷின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததால், மனைவியை கொலைசெய்ததாக நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார், கணவர் சுரேஷ்.
அடப்பாவி, இவனே மனைவியை கொலையும் செய்துவிட்டு, காவல்துறையிலும் புகார் கொடுத்துவிட்டு, போலீஸோடு சேர்ந்து மனைவியை தேடுவதுபோல் எப்படியெல்லாம் நாடகம் ஆடியிருக்கிறான்? என கர்நாடக மாநிலத்தையே உலுக்கியது, இந்த கொலை வழக்கு. பொதுமக்கள் பலரும் சுரேஷை கடுமையான வார்த்தைகளால் என்கவுண்டர் செய்ய ஆரம்பித்தார்கள். சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல. ஐந்து வருடங்கள் சிறையில் இருந்த சுரேஷ், ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். கடந்த ஏப்ரல்-1 ஆம் தேதி நண்பர்களோடு மடிகேரி பகுதியிலுள்ள ஹோட்டலில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கடந்து சென்ற பெண்ணைப் பார்த்து அப்படியே ஆடிப்போனார். இருந்தாலும் உறுதிபடுத்திக்கொள்ள அருகில் சென்று உற்று பார்த்திக்கிறார். ஆம்...சுரேஷின் மனைவி மல்லிகேவேதான். இதயமே வெடித்துப்போக, காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
“என்ன உளறுற? ஏப்ரல்- 1 ஆம் தேதிங்கிறதால எங்களை ஏப்ரல் ஃபூல் பண்றியா? உன் மனைவி செத்துப்போயி அஞ்சு வருஷம் ஆகிடுச்சு. ஜெயிலுக்கு போயிட்டு வந்ததும் போலீஸ் மேல பயமில்லாம போயிடுச்சுல்ல?” என கூலாக கேட்டிருக்கிறார்கள், போலீஸார்.
“இல்லை சார், சத்தியமா அவளைப் பார்த்தேன். தயவு செஞ்சு சீக்கிரம் வாங்க சார்” என பதட்டத்தோடு கூற, நம்பாமல் கூலாகத்தான் வந்தது, காவல்துறை.
சுரேஷ் குறிப்பிட்ட அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, ஐந்து வருடங்களாக விராஜ்பேட்டையிலுள்ள ஷெட்டிகெரேயில் தனது காதலன் கணேஷுடன் வாழ்ந்து வருவதாகக் கூறி, போலீஸாரின் இதயத்துடிப்பை எகிறவைத்திருக்கிறார், மல்லிகே!
இந்தநிலையில், மல்லிகேவை மைசூர் ஐந்தாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நிதிமன்றத்தில், ஆஜர்படுத்தியுள்ளனர் போலீஸ். கிடைத்த எலும்புக்கூடு உண்மையிலேயே யாருடையது என்பதையாவது முறையாக விசாரணை செய்து கண்டுபிடியுங்கள், என கூறியிருக்கிறது நீதிமன்றம்.
அதாவது, 2021 ஆம் ஆண்டு பெட்டதபுரா பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்ததும், சுரேஷை மிரட்டியிருக்கிறது போலீஸ்.
அதாவது, “இந்த எலும்புக்கூடு உன் மனைவியுடையதுதான். நீதான், உன் மனைவி மீதான சந்தேகத்தில் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியிருக்கிற. இதை ஒத்துக்கோ... இதையே நீதிபதிக்கிட்ட வாக்குமூலமா கொடு” எனச் சொல்லி மிரட்டி, அடித்து, உதைத்து குஷால்நகர் போலீஸார் வாக்குமூலம் வாங்கியிருப்பதும், அதையே குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மல்லிகே தனது விருப்பப்படி வாழ உரிமை உள்ளது என கூறிவிட்டது, நீதிமன்றம். ஆனால், எந்த குற்றமும் செய்யாத சுரேஷை பொய்யாக கொலை வழக்கில் கைது செய்து, ஐந்து வருடங்களாக சிறையில் அடைத்து தண்டனை கொடுத்திருக்கிறது, காவல்துறை.
சுரேஷ் சிறையில் இருந்தபோது அவரது மகன் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்துள்ளான். அப்பா சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டதால், மகன் தனது சகோதரியையும் பாட்டியையும் கவனித்துக்கொள்ள படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
“டிஎன்ஏ அறிக்கையைப் பெறுவதற்கு முன்பே, போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து சுரேஷை குற்றவாளி ஆக்கி சிறையில் அடைத்துவிட்டது, காவல்துறை” என சுரேஷின் வழக்கறிஞர் பாண்டு புஜாரி குற்றம்சாட்டியுள்ளார்.
அவசர அவசரமான, தவறான புலன் விசாரணையால் நீதிமன்றத்தையும் மக்களையும் முட்டாள் ஆக்கிவிட்டு, ஏப்ரல் -1 ஆம் தேதி தொடர்புகொண்ட அப்பாவி சுரேஷைப் பார்த்து முட்டாளாக்கப்பார்க்கிறியா? என போலீஸார், கேள்வி எழுப்பியதுதான், வேதனையின் உச்சம்!
சுரேஷ் இழந்த வாழ்க்கை, அவரது பிள்ளைகள் இழந்த எதிர்காலம் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கிவிட்ட போலீஸார் மீது என்ன நடவடிக்கை? என கேள்வி எழுப்புகிறார்கள், பொதுமக்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu