BIG STORIES
அந்நியனாக மாறிய 64 வயது பெரியவர்.. மகளுக்காக ஒரு கொலை..! மின்சாரம் வைத்து சம்பவம்
Mar 08, 2025 08:25 AM
313
அந்நியனாக மாறிய 64 வயது பெரியவர்.. மகளுக்காக கொலை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உயிரிழந்த மகளின் நினைவாக போட்டோவில் ஒட்டி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டை திருடிச்சென்ற கொள்ளையனை மின்சாரம் வைத்து கொலை செய்ததாக 64 வயது நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பின்னலூர் முரட்டு வாய்க்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் பின்னல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பதும் ஓட்டுனரான அவர் நண்பர்களுடன் மது அருந்த சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பாபுவின் பிணக்கூறாய்வு அறிக்கையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் எப்படி வாய்க்காலில் சடலமாக கிடந்தார் ? என்ற சந்தேகத்தில், கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் நேரடியாக தனது தனிப்படையினருடன் இணைந்து விசாரணையை முன்னெடுத்தார்.
அந்த பக்குதியில் அருகில் எங்கெங்கு மின் இணைப்பு உள்ளது என்று பார்த்த போது அருகில் உள்ள தோட்டத்தில் மின் இணைப்பு இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளரான சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மஞ்ச கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை அழைத்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
சில வருடங்களுக்கு முன்பு தனது ஆசை மகள் உயிரிழந்து விட்டதால், மகளின் நினைவாக அவரது உருவப்படத்தை 500 ரூபாய் நோட்டுடன் பிரேம் போட்டு தோட்டத்தில் உள்ள மோட்டார் வீட்டில் மாட்டி பூஜை செய்து வந்துள்ளார் செல்வராஜ்.
இந்த நிலையில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து வீட்டின் கதவை உடைத்து அலுமினிய அண்டா, மற்றும் இறந்த மகளின் போட்டோவுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரு வெண்கல குத்து விளக்குகளை திருடிச்சென்றுள்ளனர்.
மறு நாள் இரவு அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் செல்வராஜின் மகளின் உருவப்படத்துக்கு கீழ் 500 ரூபாய் ஒன்று ஒட்டி பிரேம் போட்டு வைத்திருப்பதை பார்த்துள்ளனர். அந்த போட்டோவை உடைத்து அந்த 500 ரூபாய் நோட்டை திருடிச்சென்றதாக கூறப்படுகின்றது.
தனது தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்து கைவரிசை காட்டும் நபர்களுக்கு அந்நியன் சினிமா பாணியில் தக்க தண்டனை கொடுக்க முடிவு செய்தார் செல்வராஜ்.
தனது வீட்டை சுற்றி பறவைகளுக்கு வைக்கும் கண்ணி போல மின்சார வயர்களால் ஒரு மின் வேலியை அமைத்துள்ளார். மறு நாள் காலை பாபு மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்துள்ளார்.
தன் மீது கொலைபழி வந்து விடக்கூடாது என்று உஷாரான செல்வராஜ், மின் இணைப்பை துண்டித்து , பாபுவின் சடலத்தை தூக்கி அருகில் உள்ள வாய்க்காலில் வீசியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாபுவுடன் மது அருந்துவதற்காக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டது யார் ? என்று விசாரித்த போது அவரது கூட்டாளிகளான பிரவீன் ,செல்வ கணபதி , செல்வகாந்தி ஆகிய 3 பேர் சிக்கினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக செல்வராஜை கைது செய்த போலீசார், திருடுவதற்கு பாபுவை அழைத்துச்சென்ற கூட்டாளிகள் பிரவீன் ,செல்வ கணபதி , செல்வகாந்தி ஆகியோரை திருட்டு வழக்கில் கைது செய்தனர்.
தன் மகள் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் அவரது நினைவாக தான் பத்திரமாக வைத்திருந்த 500 ரூபாயை போட்டோவை உடைத்து திருடிச்சென்ற ஆத்திரத்தில் தான் இப்படி மின்வேலி வைத்ததாக செல்வராஜ் ஆதங்கத்துடன் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu