BIG STORIES
அய்யோ.. அம்மா அலறல்... நொறுங்கிய அரசு பேருந்து.. 4 பேர் பலிக்கு யார் பொறுப்பு..! தறி கெட்ட லாரியால் கோர சம்பவம்
Mar 08, 2025 01:48 AM
177
நொறுங்கிய அரசு பேருந்து.. 4 பேர் பலிக்கு யார் பொறுப்பு..!
திருத்தணி அருகே கே.ஜி கண்டிகையில் சாலைபணிகள் நடந்து கொண்டிருந்த சாலையில் அதிவேகத்தில் வந்த டாரஸ் லாரி மோதியதில், அரசு பேருந்து உடைந்து நொறுங்கியது. அதில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர், 20க்கும் மேற்பட்டோருக்கு கால்கள் நசுங்கியது. பொறுப்பற்ற ஓட்டுனரின் வேகத்தால் நிகழ்ந்த கோர விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.. கண்மன் தெரியாத வேகத்தில் லாரியை ஓட்டி வந்து பேருந்தில் இடித்துவிட்டு லாரி ஓட்டுனர் ஓடிவிட்டார்..
பேருந்துக்குள் இருந்து ஓயாமல் ஒலித்த அலறல் சத்தம்... என்று பார்த்தவர்களை பதைபதைக்க வைத்த கோர விபத்து திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை பகுதியில் நிகழ்ந்துள்ளது...
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தடம் எண் 48 என்ற அரசு பேருந்து திருத்தணி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.
சாலையின் ஒரு பகுதியில் சாலைப்பபணிகள் நடந்து வந்ததால் ஓட்டுனர் பேருந்தை நிதானமாக ஓட்டி வந்தார். கேஜி கண்டிகை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது எதிரில் அசுர வேகத்தில் வந்த அசோக் லைலாண்டு டாரஸ் லாரி பயங்கரமாக மோதியதில் பேருந்தின் பாதி பகுதி முற்றிலும் உருகுலைந்து உடைந்து நொறுங்கியது.
லாரி ஓட்டுனர் சிறு காயம் கூட இல்லாமல் இறங்கி ஓடிவிட்டான். பேருந்தில் பயணித்த ஏராளமானோர் பலத்தகாயமடைந்தனர். பேருந்து மீது லாரி மோதியதை கண்டு பதறிபோன அக்கம் பக்கத்து மக்கள் ஓடிச்சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது
இரு ஜே.சி.பி வாகனத்தை கொண்டு வந்து, அந்த பேருந்தை பின்னோக்கி மெல்ல இழுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை போராடி மீட்டனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. 20க்கும் மேற்பட்டோர் கை, கால் நசுங்கியும், கால் துண்டாகியும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு தூக்கிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் பலியான பாண்டுரங்கன், முரளி, சிவானந்தம் , மகேஷ் ஆகிய 4 பேரும் அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. நெசவு தொழிலாளர்களான இவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்வாதரம் கேள்விக்குறியானதால் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சமையல் வேலைக்கு தினக்கூலியாக புறப்பட்டுள்ளனர்.
அம்மையார் குப்பத்தில் இருந்து அரசு பேருந்தில் திருத்தணிக்கு சென்ற சமயத்தில் தான் அரக்கத்தனமாக மண்லாரி மோதியதில் 4 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
தங்கள் வேலை நிறுத்தத்துக்கு கூலி உயர்வு வழங்கி உடனையாக தீர்வு கண்டிருந்தால், இவர்கள் சமையல் வேலைக்கு செல்லும் நிலை வந்திருக்காது என்றும் 4 பேரின் உயிரிழப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பலியான மகேஷின் உறவினர் ஆவேசமாக தெரிவித்தார்
இதற்கிடையே விபத்தில் பலியானாவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் முக ஸ்டாலின், பலியானவர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த கோர விபத்துக்கு யார் பொறுப்பு ? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பகல் நேரத்தில் சாலைப்பணிகள் நடைபெற்ற குறுகலான சாலையில் அதிவேகத்தில் மண்லாரியை இயக்கியதால், இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்பட்டாலும், ஓட்டுனரின் பொறுப்பற்ற வேகம் மட்டும் காரணமல்ல, இதனை கண்கானித்து தக்க நடவடிக்கை எடுக்க தவறிய போக்குவரத்து போலீசாரின் கவனக்குறைவும், விரைவாக முடிக்கப்படாத சாலைப்பணிகளும் இந்த விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகின்றது. இதற்கிடையே பலத்த காயமடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu