தமிழ்நாடு
உயிரோடு எரிக்க முயற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பகீர் புகாரின் பின்னணி..! கணவரும் IPS அதிகாரி
Feb 03, 2025 01:33 PM
1028
உயிரோடு எரிக்க முயற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பகீர் புகாரின் பின்னணி..! கணவரும் IPS அதிகாரி
சென்னை சீருடை பணியாளர் தேர்வாணைய ஏ.டி.ஜி.பி அலுவலக அறை தீப்பற்றி எரிந்த சம்பவத்தில், தன்னை உயிரோடு தீவைத்து எரிக்க சதி நடைபெற்றதாக ஏ.டி.ஜிபி கல்பனா நாயக் தெரிவித்த குற்றச்சாட்டின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி யாக தற்போது பொறுப்பு வகித்து வருபவர் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கல்பனா நாயக்.
இவர், தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.ஜி யாக பொறுப்பு வகித்து வரும் ஐ.பி.எஸ் அதிகாரியான டாக்டர் மகேந்திரகுமார் ரதோட்டின் மனைவி ஆவார். கணவன் மனைவி இருவரும் தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக பணியில் உள்ளனர். இந்த நிலையில் தான், தன்னை எரித்துக் கொல்ல சதி நடந்ததாக பரபரப்பு புகார் ஒன்றை கல்பனா நாயக் , உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் பணியில் இருந்தபோது ஜூலை மாதம் 29ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக ஏ.சி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த நிலையில் அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் இல்லை.
இந்த நிலையில் தான் தீ விபத்து நடந்த 15 நாட்களுக்குப் பிறகு விடுப்பில் சென்றிருந்த ஏடிஜிபி கல்பனா நாயக் தமிழக டிஜிபி உள்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து என்பது தன்னை கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட நாடகம் அல்லது சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அந்த புகாரில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் முடிவுகள் வெளியான விவகாரத்தில் குறிப்பாக இட ஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில், விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது தொடர்பாக தான் சுட்டி காட்டியதாகவும், இதுவே தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சதி வேலையில் அரசாங்க சொத்துக்களும் சேதமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் .
தான் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்தபோது உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் நடந்த முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக சப்-கமிட்டி அமைக்கப்பட்டு முரண்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயர் நீதிமன்றம் தொடர்புடைய அதிகாரிகள் , தேர்வு பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்து வெளியிடுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் ஜூலை 29ஆம் தேதி சென்னை எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போன் மூலமாக அழைதததாகவும், தன்னுடைய அறையில் தீ விபத்து நடந்திருப்பதாகவும், இதனால் அலுவலகம் வர வேண்டாம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் சிறிது நேரத்திற்கு முன்பு வந்திருந்தால் என்னுடைய உயிரை இழந்து இருக்க நேரிடும் எனவும் புகாரில் கல்பனா நாயக் குறிப்பிட்டுள்ளார்
இந்தத் தீ விபத்து, சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுகளின் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதன் தொடர்ச்சியாக நடந்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முந்தைய ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளையும் தெரிவித்ததால் தனது உயிருக்கு ஆபத்தாக மாறியதாக குறிப்பிட்டுள்ள கலபனா நாயக்,குறிப்பாக தீ விபத்து நிகழ்ந்த தினத்தின்போது இறுதிப் பட்டியலை ஆய்வு செய்து குறைகளை நீக்கி திருத்தப்பட்ட பட்டியல் தயார் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
தீ விபத்து நடந்த பிறகு திருத்தப்பட்ட பட்டியல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமலும், ஆய்வு செய்யப்படாமலும் வெளியிடப்பட்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தீ விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணையும் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்
தலைமை அலுவலகத்திலேயே ஒரு மூத்த உயர் அதிகாரியின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், பல அதிகாரிகள் சுற்றி இருந்தும் பாதுகாப்பு இல்லை எனவும் கல்பனா நாயக் தெரிவித்தார். விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சில மணி நேரங்களிலேயே விசாரணை முடிவில் எந்த சதியும் நடைபெற வில்லை என்பது தெரியவந்துள்ளதாக தமிழக டிஜிபி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல காவல்துரை உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கல்பனா நாயக் தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வானையமும் அறிக்கை வெளியிட்டு மறுத்துள்ளது.
6 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட புகார் அசுர வேகத்தில் விசாரிக்கப்பட்டு ஒரே நாளில் விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்ட தகவல் அரசியல் களத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பி விட்டிருக்கின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News