தமிழ்நாடு
செயினை பறிகொடுத்து பரிதவித்த பெண் 'கடன் தொல்லையால் தப்பு செய்தேன்' - கதறிய இளைஞன்
Jan 27, 2025 01:24 AM
165
செயினை பறிகொடுத்து பரிதவித்த பெண் 'கடன் தொல்லையால் தப்பு செய்தேன்' - கதறிய இளைஞன்
சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்து ஓடும்போது பிடிபட்ட இளைஞர் ஒருவர், தனது அண்ணனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வழிப்பறி செய்ததாகக் கூறி போலீசாரிடம் கதறி அழுதுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான அன்புக்கனி என்பவர் அதே பகுதியிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன் எதிர்பாராத நொடியில் அன்புக்கனியின் கழுத்திலிருந்த 3 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடியுள்ளான். அன்புக்கனியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இளைஞனை விரட்டியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் அன்புக்கனியின் மருமகன் பிரபாகரன், இளைஞனை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.
முதலில் தாம் செயின் பறிக்கவே இல்லை என்றும் தவறுதலாகப் பிடித்துவிட்டனர் என்றும் கூறிய அந்த இளைஞன், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் செயின் அறுத்ததை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தப்பியோடும்போது பயத்தில் தங்கச் சங்கிலியை குப்பைத் தொட்டி அருகே வீசியதாக அவர் தெரிவித்த நிலையில், போலீசார் அதனை மீட்டனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர் தூத்துக்குடியைச் சேர்ந்த 23 வயதான வெங்கடேஷ் என்பதும், இளங்கலை தமிழ் முடித்துவிட்டு சென்னை வேளச்சேரியில் தங்கி தனியார் கால் செண்டரில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குப் பணி புரிந்து வருவதும் தெரியவந்தது.
"தனது வீட்டில் 15 லட்சம் ரூபாய்க்குக் கடன் இருப்பதாகவும், கடும் வறுமை நிலவி வருவதாகவும் வெங்கடேஷ் கூறியுள்ளார். தனது அண்ணனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்ததாகவும், கடன் கொடுத்த நபர்கள் பணத்துக்கு காலக்கெடு கொடுத்ததால் வேறு வழியின்றி வழிப்பறியில் ஈடுப்பட்டதாகவும் கூறியுள்ளார். "செய்த தவறுக்கு என்னை சிறையில் அடைத்துக்கொள்ளுங்கள்; ஆனால், இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்த வேண்டாம்" என வெங்கடேஷ் போலீசாரிடம் கதறி அழுதபடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News