தமிழ்நாடு
பொழப்புக்கு வழி சொல்லவா.. வங்கியை கொள்ளையடித்து சிக்கிய நெல்லை இளைஞர்கள்..! மும்பை to நெல்லை வழி மங்களூர்
Jan 22, 2025 01:38 AM
253
வங்கியை கொள்ளையடித்து சிக்கிய நெல்லை இளைஞர்கள்..!
இப்படியே ஊதாரிகளாக ஊரை சுற்றாமல்.. மும்பைக்கு போயி வங்கியில் கொள்ளையடித்து வாருங்கள் என்று உறவினர் வேடிக்கையாக சொன்னதை வேதவாக்காக நினைத்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நெல்லை இளைஞர்கள் இவர்கள் தான்..!
கர்நாடக மாநிலம் மங்களூருவின் கேசி சாலையில் அலங்கருகுடே பகுதியில் உள்ள கோட்டேகர் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கடந்த 17 ந்தேதி மாலை 4 மணி அளவில் காரில் சென்ற மர்ம கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை பணத்தை அள்ளிச்சென்றது.
மங்களூரு போலீசார் அந்தப்பகுதியில் பதிவான சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். மும்பை செம்பூர் திலக் நகரில் வசிக்கும் கண்ணன் மணி என்பவரை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது அவர் பீர் பாட்டிலை உடைத்து போலீசாரை தாக்க தொடங்கியதாகவும், அவரை துப்பாக்கியால் முட்டிக்கு கீழ் சுட்டு பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்
காயம் அடைந்த 4 போலீசாரும் துப்பாகியால் சுடப்பட்ட கண்ணன்மணியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கண்ணன் மணியிடம் நடத்திய விசாரணையில், மும்பையில் இருந்து காரில் புறப்பட்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில் மங்களூரு வங்கியில் கொள்ளை அடித்ததாக தெரிவித்தார். தனது கூட்டாளிகள் இருவர் நகை மற்றும் பணத்துடன் நெல்லைக்கு காரில் தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தார். நெல்லை விரைந்த மங்களூரு தனிப்படை போலீசார், உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன், பத்மநேரியச் சேர்ந்த முருகாண்டி கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஜோஸ்வா ஆகிய இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களது வீட்டில் இருந்து 2 நாட்டுதுப்பாக்கிகள், தோட்டாக்கள், 2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அம்பா சமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் , இருவரையும் மங்களூருவுக்கு அழைத்துச்சென்றனர்
ஊரில் வேலையில்லாமல் சுற்றியதாகவும், உறவினர்கள் சொல்பேச்சை கேட்டு மும்பைக்கு சென்று கண்ணன் மணியுடன் சேர்ந்து திட்டமிட்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக இரு கொள்ளையர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News