இந்தியா
நடிகர் சயீப் அலிகானுக்கு 6 முறை விழுந்த கத்திக்குத்து.. நள்ளிரவில் நடந்தது என்ன? கரீனா கபூரின் முகமெல்லாம் சிவந்தது..!
Jan 17, 2025 01:35 AM
443
நடிகர் சயீப் அலிகானுக்கு 6 முறை விழுந்த கத்திக்குத்து
பிரபல பாலிவுட் நடிகரும் கரினா கபூரின் கணவருமான சயீப் அலிகானை, மர்ம நபர் வீடு புகுந்து 6 முறை கத்தியால் குத்திய சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகை பதற வைத்திருக்கிறது.
பாலிவுட்டில் பல படங்களில் இணைந்து நடித்து காதலில் விழுந்து நட்சத்திர தம்பதியானவர்கள் சயீப் அலிகான், கரீனா கபூர் ஜோடி. இவர்கள் மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் தங்கள் மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 2:30 மணிக்கு சயீப் அலி கானின் வீட்டிற்குள் திடீரென மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். சயீப் அலி கானின் இளைய மகன் ஜஹாங்கீரின் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார், அந்த மர்மநபர். பயந்துபோன ஜஹாங்கீர் கத்தி, கூச்சலிட்டிருக்கிறார். அந்த அலறல் சத்தம் கேட்டு, தன் அறையிலிருந்து ஓடிச்சென்ற சயீப் அலிகான், அந்த நபருடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சயீப் அலி கானை 6 முறை கத்தியால் குத்தி விட்டு அந்த மர்ம நபர் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய சயீப் அலிகானை மீட்டு அவரது மனைவி கரீனாகபூர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்கள் கலங்கிய நிலையில் கரீனா கபூர், சயீப் அலிகானுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து பாலிவுட் பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். கரீனா கபூருக்கு நம்பிக்கை தெரிவித்த அவர்கள், கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை விரைந்து கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின், சயீப் அலிகான் ஆபத்தான கட்டத்தைத் கடந்துள்ளதாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கடந்த 2023 ஆண்டு நள்ளிரவு 2 மணிக்கு சைஃப் அலிகான் மற்றும் மனைவி கரீனா கபூரை போட்டோகிராபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்ததாகவும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்னதாகவும், அவரைக் கண்டித்த சயீப் அலிகான், ‘அப்படியே என் பெட்ரூம் வரைக்கும் வந்துவிடு’ என கோபத்தில் ஆவேசமாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சயீப் அலிகான் வசிக்கும் இடம் பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். மும்பையின் முக்கியமான பகுதியில், அதுவும் பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்பு என்று சொல்லப்படும் நிலையில், உள்ளே எப்படி உள்ளே நுழைந்தார்? பாதுகாவலர்கள் கூட பார்க்காமல் வெளிநபர் ஒருவர் எப்படி வீட்டிற்குள் நுழையமுடியும்? என பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள் பாலிவுட் பிரபலங்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News