திருவொற்றியூரில் கணவன் கடத்தப்பட்டதாக மனைவி காவல் நிலையத்தில் புகார்
சென்னை திருவொற்றியூரில் வேனில் ஏற்றி கடத்திச் சென்ற நபரை தாக்கி கண்ணைக் கட்டி வேறு இடத்தில் விட்டுச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த சுகேல் என்பவர் தொழில் செய்வதற்காக பலரிடம் சுமார் 7 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தான் வாங்கிய பணத்தை காலடிப்பேட்டையை சேர்ந்த சையத் வசீம் அக்ரம் என்ற தமது நண்பரிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பேரில் சுகேலின் உறவினர்கள் அக்ரமிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை ஒரு சிலர் திடீரென அக்ரமின் வீட்டுக்கு வந்து, அவரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக அவரது மனைவி நபியா போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் அக்ரமை தேடி வந்தனர்.இந்நிலையில், மனைவி நபியாவை செல்போனில் தொடர்பு கொண்ட அக்ரம், கடத்தியவர்கள் சுகேல் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டு காரில் வைத்து தாக்கியதாகவும், தனது கண்களைக் கட்டி மணலி மார்க்கெட் பகுதியில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறினார்.
பின்னர் ஆட்டோ ஏறி திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் கடத்தியவர்களை தேடிவருகின்றனர்.
Comments