குப்பை கொட்டும் தகராறில் மனைவியோடு சேர்ந்து சண்டையிட்ட கணவன்.... என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா...!
கோவையில் குப்பை கொட்டுவது தொடர்பான மோதலில் கல்லூரி பேராசிரியை உள்ளிட்ட 3 பெண்களை துடைப்பத்தால் அடித்து குடிமிப்பிடி சண்டையிட்டதாகக் கூறி அரசு பேருந்து நடந்துநரையும் அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி நடத்தி வரும் பிளஸ்ஸிங் சாமுவேல். இவரது மனைவி ஜீன்ஃபீரிடா கிறிஸோலைட், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் அரசுப் பேருந்து நடத்துநரான விஜயகுமார்- வசுமதி தம்பதியர் வசித்து வருகின்றனர்.
இருவரது வீட்டிற்கும் இடையே உள்ள சிறிய காலி இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று விஜயகுமாரோடு வந்து வசுமதி தனது வீட்டு குப்பையை ஜீன்ஃபீரிடா வீட்டின் முன்பு கொட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஜீன்ஃபீரிடா வீட்டில் வேலைப்பார்த்து வரும் விஜயலட்சுமி தன்னிடமிருந்த குப்பையை வசுமதி வீட்டினருகே கொட்டியுள்ளார்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
விஜயலட்சுமிக்கு ஆதரவாக பேராசிரியர் ஜீன்ஃபீரிடா அவரது உறவினர் ஜெயசித்ரா ஆகியோர் களத்தில் இறங்க இருதரப்பினரும் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சாலையில் உருண்டு சண்டையிட்டனர். அங்கிருந்த,விஜயகுமாரும் மனைவிக்கு ஆதரவாக களமிறங்கி எதிர் தரப்பு பெண்களை துடைப்பத்தாலும், கையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆடைகள் கிழிந்து, அலங்கோலத்திற்குப் பிறகு ஒரு வழியாக சண்டையை இருதரப்பினரும் நிறுத்தினர்.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிளஸ்ஸிங் சாமுவேல், பின்னர் தங்களது வீட்டுப் பெண்களை அழைத்துச் சென்றார்.
இவ்வளவு களோபரத்திற்கு பிறகும் எதுவும் நடக்காதது போல விஜயகுமார் துடைப்பத்தால் வீட்டின் முன்புள்ள குப்பைகளை கூட்டத் துவங்கினார்
இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார் விஜயகுமார் மற்றும் வசுமதியை கைது செய்தனர்.
Comments