பகுதி நேர வேலை தருவதாக டெலிகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி ரூ.46 லட்சம் மோசடி...!

தூத்துக்குடியில் பகுதி நேர வேலை தருவதாக டெலிகிராம் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமணிநகரைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு, டெலிகிராம் ஆப்பில் பகுதி நேர வேலை தேவையா என்ற விளம்பரம் அனுப்பப்பட்டுள்ளது.
தனக்கு மெசேஜ் அனுப்பிய நபரிடம் தங்கதுரை பேசிய போது, அவர் FROSCH Travel Management என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்படும் தங்கள் நிறுவனத்தின் வருமானம் கொரோனா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டதால் அதனை மேம்படுத்த Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.
முதலில் 1,500 ரூபாய் வரை கமிஷன் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்த அந்த நபர், பின் அதிக கமிஷன் வேண்டுமெனில் பணம் முதலீடு செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
அதனை நம்பிய தங்கதுரை பல தவணைகளாக 46 லட்சம் ரூபாய் செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கதுரை, சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த எலியாஸ் பிரேம்குமார் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
முகம் தெரியாத நபர்கள் ஆப் மூலமாக தொடர்பு கொண்டு பேசினால், அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாமென மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments