பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் மேலும் 6 பேர் கைது..!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் பணியிட நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த தாசில்தார் உள்ளிட்ட ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
வடவீரநாய்க்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்ப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அதிகாரிகளின் துணையுடன் நிலம் அபகரிக்கப்பட்டு, பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்ததையடுத்து, உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் கடந்த ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆர்டிஓக்கள் ஜெயப்ரதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 14 பேர் மீது தேனி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகுமார் உள்ளிட்ட மற்றவர்கள் தேடப்பட்டு வந்தனர். தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் கிருஷ்ணகுமார் நேற்று ஆஜர் ஆன நிலையில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments