தமிழகத்தில் ஓரிரு தினங்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் ஓரிரு தினங்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நாளைக்கு தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ள நிலையில் 48 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் மட்டுமே கிடைப்பதால், மின் பற்றாக்குறை உள்ளது என்றார்.
மேலும் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய 716 மெகாவாட் மின்சாரம் வராததும் மின்தடைக்கு காரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் ஏற்படும் மின் தடை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர், மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை அண்ணாமலை செய்து வருவதாக விமர்சித்தார்.
Comments