தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும், வரும் 19ம் தேதி தென் தமிழகம், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வரும் 20ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
Comments