தமிழகமே அமைதி பூங்காவாக மாறி உள்ளது.!

தமிழகமே அமைதி பூங்காவாக மாறி இருப்பதாகவும், மகளிருக்கு பாதுகாப்பான நகராக சென்னை திகழ்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். மயிலை மாங்கொல்லையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்க மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தியாகராயர் நகர் தொகுதி வேட்பாளர் சத்ய நாரயணன் என்ற சத்யாவுக்காக அசோக் நகர் அம்பேத்கார் சிலை சந்திப்பு அருகே பேசினார். அப்போது அவர் சென்னை மாநகரம் மகளிருக்கு பாதுகாப்பான நகரமாக விளங்குகிறது என்றார்.
இதன் பிறகு அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் கோகுல இந்திராவுக்கு வாக்கு கேட்டு சி.எம்.டி.ஏ. காலனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர்,சென்னையில் மட்டும் குற்றங்களை தடுக்க 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.
இதே போல திருவல்லிகேணி பா.ம.க. வேட்பாளர் கசாலியை ஆதரித்து ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வள்ளுவர் கோட்டம் அருகிலும், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து அரங்கநாதன் தெரு சுரங்கப்பாதை அருகிலும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் வி.என்.ரவியை ஆதரித்து எம்.ஜி.ஆர் நகரிலும், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பென்ஜமின், பூந்தமல்லி வேட்பாளர் ராஜமன்னாரை ஆதரித்து முகப்பேர் மேற்கு பகுதியிலும், அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அலெக்சாண்டரை ஆதரித்து இளங்கோ நகர் ஆபீசர் காலனி அருகிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
Comments