ஆட்சியில் இருக்கும்போதே வாக்குறுதிகள் கொடுத்து நிறைவேற்றுகிறது அதிமுக - முதலமைச்சர்

கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் வரையிலான நகை கடன்களை அதிமுக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசு பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதுகூடத் தெரியாமல் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உள்ஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியது அதிமுக அரசு என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பொங்கல் பரிசுத் தொகை 2500 ரூபாய் வழங்கப்பட்டது என்றார். மக்களுக்கான திட்டங்களை தேடித் தேடி நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை ரத்து செய்தது அதிமுக அரசுதான் என எடப்பாடி பழனிசாமி கூறினார். மற்ற கட்சிகளெல்லாம் தேர்தல் சமயத்தில் மட்டும்தான் வாக்குறுதி கொடுப்பார்கள் என்றும், தாங்கள் ஆட்சியில் இருக்கும்போதே வாக்குறுதிகள் கொடுத்து அதனை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய பகுதியில், அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி ஆவணம் கைகாட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு தான் என்றார்.
தமிழக மக்கள் கேட்கும் திட்டம் மட்டும் இல்லாமல் கேட்காத திட்டங்களையும் நிறைவேற்றுவதாக பெருமிதத்துடன் கூறினார்.
Comments