திருநங்கை என்பதை மறைத்து திருமணம்!- பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்த, வழக்கில், விருதாச்சலத்தில் பெற்றோர் உட்பட மூன்று பேருக்கு தலா மூன்று, ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பரின் மகள் அன்புச்செல்விக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அன்பு செல்வி தடகள வீராங்கனை ஆவார். இதனால், மேற்படிப்பு படித்து விளையாட்டு பிரிவில் நான் அரசு வேலை பெற வேண்டுமென்பது எனது ஆசை. அதனால் , இப்போதைக்கு நமக்குள் தாம்பத்யம் வேண்டாமென்று அன்பு செல்வி கணவர் செல்வத்திடம் கூறியுள்ளார். செல்வமும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர், இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பும் அன்பு செல்வி படித்துள்ளார். திருமணம் முடிந்து இரு ஆண்டுகளுக்கு பிறகு, செல்வம் வலுக்கட்டாயமாக அன்புசெல்வியிடத்தில் தம்பத்யம் வைத்துக் கொள்ள முயன்ற போது, அவர் திருநங்கை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடத்தில் இது குறித்து கேட்ட போது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், வேதனையடைந்த செல்வம் திட்டக்குடி போலீஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு புகாரளித்தார். இந்த வழக்கை விருதாச்சலம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார். மருத்துவ பரிசோதனையில் அன்பு செல்வி திருநங்கை என்பது தெரிய வந்தது. வழக்கில் செல்வம் தரப்பில் நியாயமிருந்ததையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பளித்தார்.
Comments