கடற்படை அதிகாரி மரணத்தில் புதிய திருப்பம்
கடத்திச் செல்லப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக கருதப்பட்ட கோவை கடற்படை அதிகாரி சூரஜ்குமார், கடன் தொல்லையில் இருந்து தப்ப நாடகமாடியதால் உயிரிழந்ததாக மகாராஷ்ட்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள கடற்படைப் பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில் (INS Agrani) பணியாற்றிய சூரஜ் குமார் துபே சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து விமானத்தில் ஜனவரி முப்பதாம் தேதி சென்னைக்குத் திரும்பினார்.
இரவு 9 மணிக்கு விமான நிலையத்துக்கு வெளியே வந்தபோது துப்பாக்கி முனையில் அவரைக் கடத்திச் சென்ற மூவர் சென்னையில் ஓர் அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்துப் பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்பட்டது.
அதன்பின் மும்பை அருகே உள்ள பால்கருக்குக் கடத்திச் சென்று பணம் கொடுக்க மறுத்ததால் கைகால்களைக் கட்டிக் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்துள்ளதாகவும் அவர் குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்தார்.
தீயில் கருகிய நிலையில் சூரஜ்குமாரை பால்கர் வனப்பகுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.
பலத்த தீக்காயம் அடைந்ததால் மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாகக் கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில் புதிய திருப்பமாக கடன் தொல்லையில் இருந்து தப்ப சூரஜ்குமார் நாடகமாடியதாகவும் அதுவே அவர் உயிரைப் பறித்து விபரீதமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
பங்குச் சந்தையில் பணத்தை பெருமளவு முதலீடு செய்து இழப்பை சந்தித்ததால் கடன் சுமை தாளாமல் தன்னை தீயிட்டுக் கொண்ட சூரஜ்குமார் துபே தாம் கடத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளார்.
கடத்தல் ஏதும் நடக்கவில்லை என்று போலீசார் கண்காணிப்பு கேமராவில் கண்டுபிடித்தனர். அவர் பெட்ரோல் வாங்கிச் சென்றதும் கண்காணிப்பு கேமராவின் மூலம் தெரிய வந்துள்ளது.
Comments