கோவை: குளத்துக்குள் கிடந்த சாமி சிலைகள் ... கடத்தலுக்காக போட்டு வைக்கப்பட்டதா?

கோவையில் குளத்துக்குள் இருந்து மீட்கப்பட்ட 7 சிலைகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பேரூர் பகுதியில் உள்ள புட்டுவிக்கி பெரிய குளத்தின் அருகே சிலர் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது , ஓய்வு எடுப்பதற்காக குளத்தின் அருகே அமர்ந்துள்ளனர். குளத்தில் பார்த்த போது தண்ணீருக்குள் சாமி சிலைகள் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக பேரூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், குளத்தில் சிலைகள் கிடப்பதை உறுதி செய்தனர். போலீசார் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், குளத்தில் இருந்த விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி, அம்மன், கிருஷ்ணர், விநாயகர் சரஸ்வதி உள்ளிட்ட சாமி சிலைகளை மீட்டனர்.
மீட்கப்பட்டத்தில் 7 சிலைகள் உலோகத்திலும் ஒன்று கற்சிலை ஆகும். இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பிறகு குளத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் பழமையான சிலைகளா? எவ்வளவு ஆண்டுகள் பழமையானவை? எந்த கோவிலுக்கு சொந்தமானவை? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும். பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடத்தலுக்காக சிலைகள் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
Comments