காதலியை சந்திக்க வந்த இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளம்பெண்னின் தந்தை... தேடி வரும் போலீஸார்

திண்டுக்கல் அருகே காதலியை பார்க்க சென்ற இளைஞரை கத்தியால் குத்தி தப்பியோடிய இளம்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(22). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான செல்வராஜ் என்பவரது மகள் மோனிகாவை கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் வினோத்குமார் - மோனிகா காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளியன்று காலையில் மோனிகாவை சந்திப்பதற்காக பிள்ளையார்நத்தம் சென்றுள்ளார் வினோத்குமார். இதனைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த மோனிகாவின் தந்தை செல்வராஜ் , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத்குமாரிடமிருந்து புகாரினைப் பெற்ற திண்டுக்கல் சின்னாளப்பட்டி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தனர். மேலும் தனது மகளை சந்திக்க வந்த இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளம்பெண்னின் தந்தை செல்வராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments