அக்காவுக்காக தம்பியை காரில் கடத்திய மச்சான்..! அக்காவும் இல்ல.. பேக்கரியும் இல்ல..!
சென்னையை அடுத்த செங்குன்றத்தில், தன்னிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற தனது மனைவியை வீட்டிற்கு வரவைப்பதற்காக, பள்ளிக்குச் சென்ற மனைவியின் தம்பியை காரில் கடத்திச் சென்ற புது மாப்பிள்ளை கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான மாரியப்பன் என்பவரது மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது காரில் வழிமறித்த 5பேர் கொண்ட கும்பல் ஒன்று மாணவனை கடத்திச்சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் அந்தக் காரை துரத்திச் சென்ற போது கடத்தல் கும்பலைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பிடிபட்டார். அவரை பிடித்து பொதுமக்கள் செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், மாணவனின் அக்கா ஜனனிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பூபதி என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. தனது மனைவியின் குடும்பத்தினரை மிரட்டி மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு வரவைப்பதற்காக, பூபதி கும்பல் மாணவனை கடத்திச்சென்றது தெரியவந்தது.
உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும், கடத்தப்பட்ட காரின் நம்பர் மற்றும் நிறம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு நோக்கிச்சென்ற அந்த காரை மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடியில் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் மடக்கினர்.
மாணவனை மீட்ட போலீசார், அக்காவுக்காக தம்பியை தூக்கிய மச்சான் பூபதி உள்ளிட்ட கடத்தல் கும்பலை கைது செய்து செங்குன்றம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே பேக்கரியோ, டீக்கடையோ வைக்காமல் ஊதாரியாக சுற்றித் திரிந்ததால் புது மாப்பிள்ளை பூபதியை விட்டு மாணவனின் அக்கா பிரிந்து சென்ற நிலையில், தற்போது கடத்தல் வழக்கில் சிக்கிய பூபதி கவர்மெண்ட் மாப்பிள்ளையாக கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Comments