செயின் பறிப்பு முயற்சியில் கூச்சலிட்டதால் பெண்ணை குளத்தில் தள்ளிய திருடர்கள்.. நீரில் மூழ்கி பரிதாப மரணம் !

கன்னியாகுமரி அருகே செயின் பறிப்பு முயற்சியில் கூச்சலிட்ட பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த ராணுவ வீரராக இருந்து ரவுடியாக மாறியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகேயுள்ள பூந்தோப்பு புன்னத்துவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் . கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி பெயர் மேரி ஜெயா. நேற்று மாலை மூளகுமூடு பகுதியிலுள்ள ரேஷன் கடைக்கு மேரிஜெயா சென்று விட்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பூந்தோப்புநல்லபிள்ளைகுளம் பகுதியில் வரும்போது மெர்லின்ராஜா அவனின் கூட்டாளிகள் மேரி ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயனறனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மேரி ஜெயா அவர் கூச்சலிட்டார். அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் திரண்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மெர்லின்ராஜா மற்றும் கூட்டாளிகள் எங்கே மாட்டி கொள்வோமோ என்ற பயத்தில் மேரிஜெயாவை அருகிலுள்ள குளத்தில் தள்ளிவிட்டனர். இதனால், தண்ணீரில் மூழ்கிய மேரி ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்டையே, திரண்டு வந்த பொதுமக்கள் தப்பி ஓடிய மெர்லின்ராஜை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவனின் கூட்டாளிகள் தப்பி விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவட்டாரு காவல்துறையினர் மெர்லின்ராஜை கைது செய்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த மேரிஜெயாவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மெர்லின்ராஜூம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
திருவட்டார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செயின்பறிப்பில் ஈடுபட்ட மெர்லின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்குட்பட்டு வெளியேற்றபட்டவன் என்றும் அவன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி,கட்டபஞ்சாயத்து,வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
குளத்தில் தள்ளியதில் பலியான மேரிஜெயாவின் இரு மகள்களும் உறவினர்களும் அவரின் சடலத்தை பார்த்து கதறியழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Comments