தமிழகத்தில் கனமழை நீடிக்கும்… வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் குமரி கடல் பகுதிக்கும் இடையே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.
குமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் புவனகிரியில் 11 செ.மீ. மழையும், பரங்கிபேட்டையில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இன்றும், நாளையும் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 12, 13 ஆகிய தேதிகளில் கேரள கடலோர பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments