ரேஷனில் பொங்கல் பரிசுப் பொருட்கள் இன்று முதல் விநியோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு அறிவித்த, 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய பரிசுத்தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்றுமுதல் வழங்கப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 21-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.
இதற்காக 5 ஆயிரத்து 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2 கோடியே 10 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் வீடுவீடாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டன. அதில் பரிசுத் தொகையை பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. கூட்டத்தைத் தவிர்க்க காலை 100 பேருக்கும் மாலை 100 பேருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வர முடியாதவர்கள் பொங்கலுக்குப் பிறகும் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Comments