மாத்திரை சாப்பிட சொன்ன தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்! தூத்துக்குடியில் பரிதாபம்

தூத்துக்குடி அருகே மாத்திரை சாப்பிட சொன்ன தந்தையை, உலக்கையால் அடித்துக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நாட்டு வைத்தியம் மற்றும் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ராஜாகனியும், மோகன்ராஜும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மோகன் ராஜ், தனது இரண்டாவது மனைவி ஆனந்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 23 வயதில் புருஷோத்தமன் என்ற மகன் உள்ளார். டிப்ளமோ படித்து வந்த புருஷோத்தமன் உடல்நலக்குறைவு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
புருஷோத்தமன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக தினமும் புருஷோத்தமன் மாத்திரை சாப்பிட வேண்டியிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு புருஷோத்தமன் மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் மோகன்ராஜ் தனது மகனை மாத்திரை சாப்பிட வலியுறுத்திள்ளார். ஆனால், புருஷோத்தமன் பிடிவாதமாக மாத்திரை சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து புருஷோத்தமன் மோகன்ராஜின் தலையில் அடித்துள்ளார். இதில், மோகன்ராஜ் முகத்திலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எட்டயபுரம் காவல்துறையினர், மோகன்ராஜீன் உடலை மீட்டு உடற்கூராய்விற்க்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், புருஷோத்தமனை கைது செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்திரை சாப்பிட சொல்லிய தந்தையை, மகன் அடித்து கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments