பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 1805 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக ஆயிரத்து 805 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்களின் கனவான வீடு கட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த 50 ஆயிரம் ரூபாயை உயர்த்தி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அலகுதொகை 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படுகிறது. இந்த தொகையுடன் ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 23 ஆயிரத்து 40 ரூபாய் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைகட்ட 12 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து மொத்தம் ஒருவீட்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 40 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ஆயிரத்து 805 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூடுதல் நிதி உதவியால், கட்டிமுடிக்காமல் உள்ள வீடுகள் கட்டிமுடிக்கப்படுவதுடன், தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் உதவியோடு கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments