பெங்களூருவில் சோகம் : குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ் தம்பதி

பெங்களூருவில் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் போலீஸ் தம்பதி உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி ஷீலா. இருவரும் கர்நாடக போலீஸில் பணியாற்றினர். பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள சம்பிகேஹள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுரேஷ் எழுத்தராகவும் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஷீலாவும் பணி புரிந்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தை இல்லை. மருத்துவ சிகிச்சை பெற்றும் பலனில்லை என்று தெரிகிறது. இதனால் சுரேசும், ஷீலாவும் மனவருத்தத்தில் இருந்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் , நேற்று காலை 10 மணிக்கு பிறகும் சுரேசின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் சுரேசின் வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது, சுரேசும், ஷீலாவும் இறந்தபடி கிடந்தனர். அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக கொத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கொத்தனூர் போலீசார் சுரேசின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சுரேஷ், ஷீலாவின் உடல்களை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனபோதிலும் குழந்தை இல்லாத காரணத்தால் சுரேசும், ஷீலாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Comments