நிதானமாக கழுத்தை அறுக்கும் கொடூரம்... பதறவைக்கும் காட்சிகள்!
சென்னையில் கோழியின் கழுத்தை அறுப்பது போல் மீன்பாடி வண்டி ஓட்டுநர் ஒருவரின் கழுத்தை அறுத்து கொல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தவறான உறவு விவகாரத்தில் பழிவாங்கும் செயலாக இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.
சென்னை, துரைப்பாக்கம் கண்ணகிநகர், 16வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், எழும்பூர் காவல் நிலையம் அருகே மீன்பாடி வண்டி ஓட்டிக் கொண்டு பிளாட்பாரத்தில் தங்கி பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி இறந்து விட்ட நிலையில், ஒரே ஒரு மகன் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.
புதன்கிழமை இரவு குடிபோதையில் சந்தோஷ்குமார் எழும்பூர், ஆதித்தனார் சாலையில் தனது மீன்பாடி வண்டியில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், சந்தோஷை கீழே தள்ளுகிறது. அவர் கீழே விழுந்ததும் மற்ற இருவர் விலகிக்கொள்ள, போதையின் உச்சத்தில் இருந்த சந்தோஷின் கழுத்தை எவ்வித பதற்றமோ, அவசரமோ, பயமோ இன்றி நிதானமாக ஆயுதம் கொண்டு அறுத்துவிட்டுச் செல்கிறான் ஒருவன். பதைபதைக்கவைக்கும் இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
கழுத்தை அறுத்ததும் சில விநாடிகள் மட்டும் துடிக்கும் சந்தோஷின் உடல் அதன் பின்னர் அடங்கிவிடுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன், அருண் அவனது நண்பன் என மூவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலையான சந்தோஷ்குமாரும் இளவரசனும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் இளவரசன் 6 மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அந்த இடைவெளியில் அவனது மனைவியுடன் சந்தோஷ்குமார் தகாத உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியவந்து கண்டித்தபோதும் சந்தோஷ்குமார் கேட்காததால் அவனை கொலை செய்தேன் என இளவரசன் கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.
Comments