தமிழகத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments