‘ஐந்து பைசா வேண்டாம்!’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குத் தானமாக வழங்கிய தாராள மனசு...

கோவை அருகே நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த தொழிலதிபர் ஒருவர் ரூ.3 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகேயுள்ள எலச்சிபாளையத்தில் 1957 - ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்போது 150 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மேல்நிலைக் கல்வி கற்க வேண்டுமென்றால் மாணவர்கள் 15 கி.மீ தூரம் செல்லவேண்டியிருப்பதால், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. பொதுமக்களும் தன்னார்வலர்களும் இணைந்து பள்ளியைத் தரம் உயர்த்த முயற்சி மேற்கொண்டுவந்தனர்.
பள்ளிக் கூடம் அருகே ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. கிராம மக்கள் தொழிலதிபரான ராமமூர்த்தியை அணுகி, பள்ளிக் கூட நிலம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். தொழிலதிபர் ராமமூர்த்தியின் தந்தை அப்பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு 50 சென்ட் நிலத்தை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர் ராமமூர்த்திக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
தொழிலதிபர் ராமமூர்த்தி பேசுகையில் , “பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்கள் முன்னேறினால், அதுவே எனக்கு மனநிறைவைத் தரும். பள்ளிக்குத் தேவையான உதவிகளை இயன்றவரை செய்யத் தயாராக உள்ளேன்” என்றார்.
Comments