இரு மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் : நெஞ்சைப் பதற வைக்கும் தாயின் முடிவு
நெல்லை சுத்தமல்லியில் தனது இரண்டு மகன்களை காவல்துறையினர் காரணம் இன்றி விசாரணைக்கு அழைத்து சென்றதாகக் கூறி போலீசார் முன்னிலையிலேயே தாய் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சுத்தமல்லி சத்தியாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா, கணவரைப் பிரிந்து வாழும் நிலையில், கூலி தொழிலாளிகளான பிரசாந்த், பிரதீப் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கொரோனா ஊரடங்கின் போது, பிரதீப் சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின்பேரில் பிரதீப், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சுத்தமல்லி போலீசார் சத்தியா நகர் பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக பிரதீப்பை விசாரணை என்ற பெயரில் வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் எந்த காரணமும் கூறவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை பிரதீப்பின் அண்ணன் பிரசாந்தையும் விசாரணைக்கு எந்தவித காரணமும் கூறாமல் போலீசார் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தாய் சகுந்தலா தட்டிக்கேட்டதாகவும், அப்போது காவலர்கள் சகுந்தலாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சகுந்தலா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி காவலர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் .
இதனைப்பார்த்த காவலர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சகுந்தலா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிவண்ணன், கடந்த 3ஆம் தேதி பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக, பிரதீப் வீட்டில் இருந்த லேப் டாப்பை பறிமுதல் செய்ய சென்றபோது அவரின் தாய் வீட்டின் கதவுகளை மூடிவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், சம்பவ இடத்தில் அவரது இரு மகன்களும் இருந்தனர் என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
Comments